அதிமுக தேர்தல் வியூக வகுப்பாளர் சுனிலுக்கு தனி அலுவலகம்... ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற பூஜை
சென்னை: அதிமுக தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கடந்த ஜூன் 11-ம் தேதி தனி அலுவலகத்துக்கான பூஜை நடத்தி முதற்கட்டமாக 15 நபர்களை பணிக்கு தேர்வு செய்துள்ளார்.
நியூஸ் ஜே அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் ஒரு பகுதியில் சுனில் டீமுக்கு அலுவலகம் அமைத்துக் கொள்ள உதவி செய்துள்ளது அதிமுக தலைமை.
இந்நிலையில் விறுவிறுவென பணிகளை தொடங்கியுள்ள சுனில், முதல் வேளையாக சேலம் மாவட்டத்துக்கு ரகசிய விசிட் அடித்திருக்கிறார்.
புதுச்சேரி.. மதுபான ஆலைகளில் ஹாலோகிராம் மோசடி.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிமுக மனு!
திமுகவுக்கு பணி
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான குழுவில் பாஜகவுக்காக பணியாற்றியவர் சுனில். பிறகு தனது குரு பிரசாந்த் கிஷோருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரிடம் இருந்து விலகி திமுகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். ஓ.எம்.ஜி. குரூப் என்ற பெயரில் செயல்பட்ட சுனில் டீம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் நமக்கு நாமே, நீதி கேட்க வா, என்ற புதுமையான நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தியது.
கிராம சபைக் கூட்டம்
2016-ல் திமுகவுக்கான வெற்றிவாய்ப்பு நூலிழையில் பறிபோனது. இருப்பினும் திமுக முகாமில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த சுனில், அடுத்தடுத்து கிராம சபைக்கூட்டம் என்பன உள்ளிட்ட புதுமைகளை கொண்டு வந்தார். இதன் எதிரொலியாக 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெரிய வெற்றியை ஈட்டியது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவால் வெற்றிபெற முடியவில்லை. எங்கு தவறு நடக்கிறது, எப்படி இடைத்தேர்தலில் தொகுதிகள் நழுவியது என ஆராயத் தொடங்கியது.
பிரசாந்த் கிஷோர்
அந்த சூழலில் ஒய்.எஸ்.ஆர். காங் பிரமுகரும், ஜெகன் மோகன் ரெட்டி உறவினருமான ஒருவர் மூலம் பிரசாந்த் கிஷோர் திமுகவுக்குள் புகுந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத சுனில் பிரசாந்த் கிஷோரின் வருகையை ரசிக்கவில்லை. அப்போது திமுக முகாமில் இருந்து வெளியேறும் எண்ணத்தில் இருந்த சுனிலிடம், போகவேண்டாம் பிரசாந்த் கிஷோரும் வேலைபார்க்கட்டும், நீங்களும் எப்போதும் பால் பாருங்க எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
திமுகவில் இருந்து விலகல்
இது நடைமுறைக்கு சாத்தியமாகாது என்றும், பழைய மனக்கசப்பு தீராத நிலையில் பி.கே.வுடன் இணைவது முடியாத காரியம் என நினைத்த சுனில் அங்கிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விலகினார். அதன் பின்னர் சுமார் 4 மாதங்கள் எந்த அரசியல் கட்சிக்கும் பணியாற்றாமல் அமைதிகாத்தார். இந்நிலையில் அவரை அதிமுக சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பணிகளை தொடங்குமாறும் சுனிலிடம் முக்கிய அமைச்சர் ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தனி அலுவலகம்
இதையடுத்து விறுவிறுவென பணிகளை தொடங்கிய சுனில், முதற்கட்டமாக 15 நபர்களை பணிக்கு எடுத்திருக்கிறார். மேலும், நியூஸ் ஜே அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் ஒரு பகுதியில் தனி அலுவலகமும் அமைத்திருக்கிறார். இதற்கான பூஜை கடந்த 11-ம் தேதி மிக எளிய முறையில் நடைபெற்றிருக்கிறது. சுனில் கேட்கும் வசதிகளை எல்லாம் செய்து கொடுக்கும் அதிமுக தலைமை, அவருக்கு 150 தொகுதிகள் இலக்கு நிர்ணயித்துள்ளதாம். இதனிடையே இவர் சேலம் மாவட்டத்துக்கு மட்டும் விசிட் அடித்து கள நிலவரங்களை அறிந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.