சின்னத்திரை நடிகை ரேகா ஜெனிபரின் கணவர் ஆபீசில் தற்கொலை.. அதிர்ச்சி காரணம்!
சென்னை: பிரபல சின்னத்திரை நடிகை ரேகாவின் கணவர் கோபிநாத் தான் வேலை செய்யும் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத்(39), இவர் அண்ணாநகர், டி.வி.எஸ். காலனியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று
கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை அலுவலகத்தை திறக்க ஊழியர்கள் வந்தனர். அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த அறையில் கோபிநாத் தூக்கு போட்டு தொங்கியபடி இருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினார்கள்.
உடலை கைப்பற்றி
இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த கோபிநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
துணை நடிகை
விசாரணையில் கோபிநாத் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு காதலித்து டிவி சீரியல் நடிகையும், தொகுப்பாளினியுமாகிய ரேகா என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்கள் உள்ளார். ரேகா பிரபல தனியார் தொலைக்காட்சி நாடகங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
அடிக்கடி தகராறு
கோபிநாத் கடந்த 6 மாதங்களாக ஜெஜெ நகரில் இயங்கி வரும் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், கோபிநாத்திற்கு நிறுவனத்தில் வேலை செய்யும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் மேலும் கடன் பிரச்சினையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மன உளைச்சல்
இதனால் நேற்று தனது மனைவியிடம் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டதையடுத்து அலுவலகத்திற்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்துள்ளார். இந்த அலுவலகத்திற்கு மூன்று சாவிகள் உள்ளது. அதில் ஒரு சாவி கோபிநாத்திடம் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த கோபிநாத் அலுவலகத்தை திறந்து உள்ளே சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீஸ் விசாரணை
மேலும் இதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். வேலை செய்த அலுவலகத்தில் உள்ள அறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.