7 தமிழர் விடுதலை குறித்து உடனே முடிவெடுக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்து உடனே முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வலியுறுத்தினார்.
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்யலாம் என்பது தமிழக அரசின் முடிவு. இந்த முடிவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தராமல் 2 ஆண்டுகாலம் தாமதித்து வருகிறார்.
ஆளுநரின் இந்த நிலைப்பாட்டுக்கு உச்சநீதிமன்றமும் அதிருப்தியை வெளியிட்டிருந்தது. மேலும் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்த போவதாகவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
ஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு
இந்நிலையில் பேரறிவாளனின் பரோலை 1 வார காலத்துக்கு உச்சநீதிமன்றம் நேற்று நீட்டித்து உத்தரவிட்டது. இதனிடையே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தலைவர்கள் குழு இன்று நேரில் சந்தித்தது. இந்த சந்திப்பின் போது, 7 தமிழர் விடுதலை குறித்து ஆளுநர் உடனே முடிவு எடுக்க வேண்டும்; இனியும் தாமதிக்க கூடாது என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
போராடும் அற்புதம் அம்மாள்
இது தொடர்பான வழக்கில் சிபிஐ, ஆளுநர் முடிவு எடுப்பதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியது. இதனையடுத்து மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநரிடம் வலியுறுத்தினோம். பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தனி ஒருவராக 29 ஆண்டுகள் போராடி வருகிறார்.
ஆளுநர் உறுதி
ஆளுநர் தரப்பில் தாமதத்துக்கு சில சட்ட ரீதியான காரணங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு நாங்கள் சட்ட ரீதியான விளக்கங்கள் அளித்திருக்கிறோம். தருமபுரியில் பேருந்தில் 3 மாணவிகளை எரித்து கொன்ற வழக்கில் அதிமுகவினர் விடுதலை செய்யப்பட்டதையும் நாங்கள் சுட்டிக்காட்டினோம். எங்களது கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்திருக்கிறார்.
வெளியே சொல்ல முடியாது
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் வேறு சில விஷயங்களையும் விவாதித்திருக்கிறோம். அவற்றை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.