7 வயசு சிறுவனுக்கு சாக்லெட் கொடுத்து.. 42 வயசு ஆசாமியின் அசிங்க செயல்.. 10 வருடம் ஜெயில்!
7 வயது சிறுவனுக்கு சில்மிஷம் தந்த நபருக்கு 10 வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளது
சென்னை: 7 வயசு சிறுவனுக்கு சாக்லெட் கொடுத்து, சில்மிஷத்தில் ஈடுபட்டு தவறாக நடந்து கொண்ட 42 வயசு ஆசாமிக்கு 10 வருடம் ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.
சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் சாரங்கபாணி. சாமந்தி பிளவர் காலனியில் வசித்து வந்தார். வயசு 42 ஆகிறது. இவர் தன் வீட்டு அருகே இருந்த 7 வயசு சிறுவனை தனியாக அழைத்து சென்றார்.
அவனுக்கு ஒரு சாக்லெட்டையும் தந்து, ஆசையாக பேசி தவறாக நடந்து கொண்டார். மேலும் சிறுவனையும் தவறு செய்ய கட்டாயப்படுத்தி உள்ளார்.
பின்னர், இது பற்றி வீட்டிலோ, வெளியிலோ யார் கிட்டயும் சொல்லக்கூடாது என்றும், அப்படி சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். ஆனால் சிறுவனோ வீட்டில் வந்து பெற்றோரிடம் கதறி கொண்டே இதை பற்றி சொல்லி உள்ளான். ஆத்திரம் அடைந்த பெற்றோர், உடனடியாக எம்கேபி நகர் போலீசில் புகார் தந்தனர்.
போலீசாரும் சாரங்கபாணியை பிடித்து விசாரணை நடத்தியதில் சிறுவனிடம் தப்பாக நடக்க பார்த்ததும், கொலை செய்வதாக மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சாரங்கபாணியை ஜெயிலில் அடைத்தனர். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது.
எனினும் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் சென்னை மகளிர் கோர்ட்டில், நீதிபதி மஞ்சுளா முன்பு வழக்கு விசாரணைக்கு மீண்டும் வந்தது. வாதங்கள் முடிவடைந்த நிலையில், சாரங்கபாணி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக மஞ்சுளா அதிரடியாக உத்தரவிட்டார்.