Exclusive: காரிலேயே பிரச்சனைகளை பேசி தீர்த்துடுவார்... கருணாநிதி பற்றி சிலாகிக்கும் சண்முகநாதன்
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் ஜூன் 3-ம் தேதி வரும் நிலையில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார் அவரது உதவியாளரான சண்முகநாதன்.
முதலில் இது குறித்து பேசுவதற்கு தயக்கம் காட்டிய அவரிடம், நாம் மேற்கொண்ட நீண்ட முயற்சிக்கு பிறகு கலைஞரை பற்றிய நினைவலைகளை பகிர்ந்துகொள்ள ஓப்புதல் தெரிவித்தார்.
இதனிடையே மறைந்த கருணாநிதி குறித்து அவர் கூறியதன் விவரம் பின்வருமாறு;
155 வருடத்திற்கு பின்.. சுற்றி வளைக்கப்பட்ட வெள்ளை மாளிகை.. சிவில் வார் அச்சத்தில் அமெரிக்கா.. பகீர்
பெயர் கூறி அழைப்பார்
''தலைவரை பொறுத்தவரை எந்த ஒரு செயலும் மிகச்சரியாக இருக்க வேண்டும் என நினைப்பார். அவரை பார்ப்பதற்காக நேரம் கேட்ட விஐபிக்களின் லிஸ்டை முதல் நாள் இரவே டைப் அடித்து தலைவரிடம் கொண்டு போய் கொடுப்பேன். அதை படித்துப்பார்த்து யாரை சந்திக்க வேண்டும் என்பதை அவர் தான் முடிவுசெய்வார். மேலும், லிஸ்டில் உள்ள பெயர்களை டிக் அடித்து நேரமும் குறிப்பிட்டு கொடுப்பார். மற்றபடி தொண்டர்களை சந்திப்பது என்றால் அவருக்கு அவ்வளவு பிரியம். அதற்கு எப்போதும் தடையில்லை. தலைவர் வீட்டில் இருந்து புறப்படும் போது அவர் கண்களில் தென்படும் நிர்வாகிகளை பெயர் சொல்லி அழைத்து நலம் விசாரிப்பார்''.
பிரச்சனைகளுக்கு தீர்வு
''வெளியூர் பயணங்கள் என்றால் சாலை மார்க்கமாக காரில் பயணிப்பதையே அதிகம் விரும்புவார். சில நேரங்களில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில், விமானம் டிக்கெட்களை கூட ரத்து செய்ய கூறிவிட்டு காரில் செல்வார். கலைஞருக்கு காரில் பேசிக்கொண்டே செல்வது மிகவும் பிடிக்கும். இதனால் பயணத்தின் போது அவர் பாட்டு கேட்பது கூட அரிது. கார் பயணத்திலேயே உட்கட்சி பிரச்சனைகளை பற்றி பேசி தீர்வு காண்பதுடன் அதற்கும் முற்றுப்புள்ளியும் வைத்துவிடுவார்''.
அழுதுவிட்டேன்
''எனக்கு 32 வயது இருக்கும் என நினைக்கிறேன், ஒரு முறை ரயிலில் செல்லும் போது தலைவர் என்னை திட்டிவிட்டார். இதற்காக நான் தனியாக சென்று அழுது கொண்டிருந்தேன். உடனடியாக அவன் அழுதுகொண்டிருப்பான் பாவம் அழைத்து வா எனக் கூறி அன்பில் (அன்பில் தர்மலிங்கம்) மாமாவை அனுப்பி வைத்தார். அன்பில் மாமா என்னை மாப்ள என்று தான் அழைப்பார். மனதில் எதையும் வைத்துக்கொண்டு தலைவர் திட்டவில்லை. அழக்கூடாது வா மாப்ள என்று தலைவரிடம் அழைத்துச்சென்றார். என்னை பார்த்தவுடன், இதுக்கெல்லாம் அழுவியா என்று கேட்டு என் மீது அவர் வைத்துள்ள உரிமையை வெளிப்படுத்தினார்.''
உடல்நிலை
''தலைவருக்கு உடல்நிலை நலமாக இருந்தவரை, ஒரு காலத்தில் விரால் மீன் விரும்பி சாப்பிடுவார். மதியத்தில் கோழிக்கறியும், இரவு நேரத்தில் விரால் மீன் குழம்பும் பிரியப்பட்டு சாப்பிடுவார். செயல்மணி என்பவர் இருந்தார், நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். அவர் தான் விரால் மீன் வாங்கி வருவார். உடல்நிலை சரியில்லாமல் போனதில் இருந்து இதை சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்''
நாள்தவறாமல் கோபாலபுரம்
''தலைவர் இப்போது இல்லை என்றாலும் கூட நாள் தவறாமல் கோபாலபுரம் இல்லத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று வருகிறேன். அவர் எழுதிய 4,100 கடிதங்களை (அறிக்கைகள் இல்லாமல் கடிதங்கள் மட்டும்) தொகுத்து புத்தகமாக வெளியிடும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். மொத்தம் 20 தொகுப்புகள் வருகின்றன. அதில் நான்கைந்து தொகுப்புகள் புரூஃப் பார்ப்பதற்காக தயாராகி விட்டன. அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் கொரோனாவால் அது தடைபட்டுவிட்டது. தலைவர் பிறந்தநாளுக்கு அவர் எழுதிய கடிதங்களை புத்தகமாக வெளியிட முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை''.