மதுரை, கோவை தலைநகராகும்.. 2 முதல்வர்கள்.. வெளியான 'தேர்தல் அறிக்கை'.. வியந்து பார்க்கும் கட்சிகள்
சென்னை: தமிழகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகளே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள சிவ சேனா கட்சி.
மகாராஷ்டிராவில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து அரசு நடத்தும் அளவுக்கு பெரிய கட்சிதான். ஆனால் தமிழகத்தில் சிவ சேனா எப்போதாவது ஏதாவது போராட்டங்கள் நடத்தும்போது மட்டுமே பெயர் வெளியே வரும் கட்சியாகத்தான் இருக்கிறது.
அப்படியான ஒரு கட்சி, அதிமுக, திமுக போன்ற தமிழகத்தில் ஆட்சி செய்து அனுபவம் உள்ள, கட்சி பிரமுகர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரு தேர்தல் அறிக்கையை ஒட்டியுள்ளது. தேர்தல் அறிக்கை என்று முழுசாக சொல்ல முடியாது. வரைவு தேர்தல் அறிக்கை என்று சொல்லலாம்.
நாகை மாவட்டம்
ஏனெனில், நாகை மாவட்டம் முழுவதும் சிவசேனா கட்சியின் 2021 வரைவு தேர்தல் அறிக்கை என்ற பெயரில்தான், போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதை பார்த்துதான், மக்கள் மட்டுமல்லாது அனைத்து கட்சிகளும் ஆச்சரியப்பட்டு நிற்கின்றன. சிவசேனா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேல் நாகை தொகுதியில் போட்டியிட போகிறாராம். தலைமைக்கு விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
சிவ சேனா
இதன் ஒரு பகுதிதான் வரைவு தேர்தல் அறிக்கை போஸ்டர் என்கிறார்கள். அந்த போஸ்டரில் அப்படி என்னதான் கூறியிருக்கிறது? இதோ பாருங்கள். திருச்சி, மதுரை, கோயம்புதூர் தமிழக தலைநகரங்களாக ஆக்கப்படும், திருவள்ளூவர் சிலை, ராஜராஜ சோழன் சிலை ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் நிறுவப்படும் என்று ஆரம்பமே அதில் அதிரடியாக இருக்கிறது.
இந்து மதம்
இது மட்டுமா.. இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை, பத்தாம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை வழங்குவோம். முருகனின் ஆறுபடை வீடுகள், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், மேல்மருவத்தூர் மாரியம்மன்கோயில், சபரிமலை ஐயப்பன்கோயில் ஆகிய திருத்தலங்களுக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று இந்து ஓட்டுக்களுக்கான வாக்குறுதிகளையும் வழங்க தவறவில்லை சிவ சேனா பிரமுகர்.
இரண்டு முதல்வர்கள்
ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய கல்லுாரி, ஜாதி வாரி மக்கள் தொகைக்கேற்ப அமைச்சரவையில் பிரதிநிதித்துவம், பூரண மதுவிலக்கு, காவல்துறையை முற்றிலும் நவீன மயமாக்கி புதிதாக 2 லட்சம் பேர் காவலர்கள் பதவிக்கு உருவாக்கப்பட்டு காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும், வருடத்திற்கு 20 நாட்கள் சுற்றுலா செல்ல விடுமுறை தரப்படும் என்றும் கூறியுள்ள அந்த வரைவு அறிக்கை, அடுத்ததாக கூறியுள்ளது வேற லெவல். முதல்வர் பதவி இரண்டரை ஆண்டுகளாக பிரிக்கப்படுமாம். ஆணுக்கு இரண்டரை ஆண்டு, பெண்ணு அதே போல இரண்டரை ஆண்டு என முதல்வர் பதவி சுழற்சியில் விடப்படும். இப்படி 27 வகை வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.