"செத்தா.. எங்க 3 பிள்ளைகளும் கொள்ளி வைக்க கூடாது".. பசியால் துடித்த தம்பதி.. 2020ஐ உலுக்கிய தற்கொலை
சென்னையில் பசியால் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மறக்க முடியாது
சென்னை: கடைசி காலத்தில் பெற்ற பிள்ளைகள் கஞ்சி ஊற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தது எல்லாம் அந்த காலம்.. பசி கொடுமையால் வயதான தம்பதியினர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது இந்த காலம்.. தினம் தினம் பசியால் துடித்து துடித்து ஒரு தம்பதி இறந்தே விட்டனர்.. 2020-ஐயே உலுக்கி போட்ட இந்த சம்பவத்தை யாராலும் மறக்கவே முடியாது!
கடந்த ஜூலை மாதம் நடந்த சம்பவம் இது.. சென்னை செம்பியத்தை சேர்ந்தவர் குணசேகரன்-செல்வி தம்பதி.. இவர்களுக்கு 3 மகன்கள்.. இதில் 2 மகன்களுக்கு கல்யாணம் செய்து வைத்தனர்.. அவர்கள் 2பேரும் கல்யாணம் ஆன உடனேயே தனிக்குடித்தனம் போய்விட்டனர்.. கடைசி மகனுக்கு கல்யாணம் ஆகவில்லை.. அதனால் தம்பதியுடனேயே அவர் வசித்து வந்தார்.
ஆனால், அந்த மகனும் வீட்டு செலவுக்கு இந்த பெற்றோரிடம் காசு தராமல் இருந்திருக்கிறார்.. கை செலவுக்கு பணம் தராததால் வீட்டில் மளிகை உட்பட எந்த பொருளும் இல்லை.. சமைத்து சாப்பிடவும், கடைசியில் வாங்கி சாப்பிடவும் வழியில்லை.. ஒருகட்டத்தில் இந்த தம்பதியால் பசியை தாங்க முடியவில்லை.. அதனால், வயதானதையும் பொருட்படுத்தாமல், செக்யூரிட்டி வேலைக்கு போனார் குணசேகரன்.
தற்கொலை
இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போடப்பட்டுவிட்டது.. அதனால் அந்த வேலையும் பறிபோனது.. இதனால் வறுமை அவர்களை வாட்டியது.. பசி அவர்களை துரத்தியது.. பட்டினி அவர்களை விரட்டியது... கடைசியில் 2 பேரும் ஒரே சமயத்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்... இந்த தகவல் கிடைத்ததும், செம்பியம் போலீசார் விரைந்து சென்று விசாரணையை கையில் எடுத்தனர்.. அப்போதுதான் அந்த வீட்டில் ஒரு லெட்டர் இருந்தது.. அந்த லெட்டரை தற்கொலைக்கு முன்பு 2 பேரும் எழுதியிருந்தனர்.
பிணங்கள்
"நாங்க சாவதற்கு யாரும் காரணமில்லை.. ஆனால், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு கொள்ளி போட வேணாம்.. எங்கள் சடலத்தை அனாதை பிணங்களாக அடக்கம் செய்துவிடுங்கள்.. எங்களை போலீசார்தான் அடக்கம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து, அவர்களது ஆசைப்படியே உதவி கமிஷனர் சுரேந்தர் தலைமையில், சடலங்களை அடக்கம் செய்ய முடிவானது.
மகன்கள்
ஆனால் பெற்றோர் உடலை தங்களிடம் தருமாறு மகன்கள் 3 பேரும் கதறி கதறி அழுதனர்.. இதையடுத்து, போலீசார் அவர்களிடம் சடலங்களை ஒப்படைத்தனர்.. சென்னை ஓட்டேரியில் உள்ள மின்மயானத்தில் போலீசார் சடலங்களுக்கு மரியாதை செய்து, 3 மகன்கள் முன்னிலையில் உடல்கள் எரியூட்டப்பட்டன.
பிரேமா
அதுபோல, இன்னொரு சம்பவம் சேலத்தில் நடந்தது.. இது தற்கொலை இல்லை.. ஆனால் கொடுந்துயரம்.. வறுமையின் பிடியில் சிக்கி கொண்ட ஒரு இளம் தாய், தன் தலைமுடியை மழித்து.. மொட்டை அடித்து.. அந்த தலைமுடியை விற்று.. தன் குழந்தைகளின் பசியை போக்கினார். பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரேமா என்பது அவர் பெயர்.. கணவர் பெயர் செல்வம்.. செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 3 குழந்தைகள்.
தற்கொலை
செல்வத்துக்கு நிறைய கடன் இருந்தது... அதை அடைக்க முடியாமல் தவித்தார்.. ஒருகட்டத்தில் தீக்குளித்து தற்கொலையும் செய்து கொண்டார்.. பிரேமாவால், கணவரின் தற்கொலையை தாங்க முடியவில்லை.. வீட்டு செலவுக்கு பணமும் இல்லை.. செங்கல் சூளையில் கூலி வேலைக்கு போயும் பணம் போதவில்லை.. கடன் கொடுத்தவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கவும், 3 குழந்தைகளுக்கும் சாப்பாடு போட முடியவில்லை. குழந்தைகள் பசியால் கதறின.
தலைமுடி
என்ன செய்வதென்றே தெரியாத சூழலில் பிரேமா, அந்த குழந்தைகளை அழைத்து கொண்டு கோயிலுக்கு போனார்.. தன் தலையை மொட்டை அடித்து, அந்த தலைமுடியை 150க்கு விற்றார்.. 3 குழந்தைகளுக்கும் சாப்பாடு வாங்கி தந்தார்.. மிச்சமிருந்த பணத்தில் விஷம் வாங்கி தற்கொலைக்குத் திட்டமிட்டபோதுதான் அதே பகுதியை சேர்ந்த பாலா என்ற சமூக ஆர்வலரால் மீட்கப்பட்டார்.
பசி
பிரேமாவின் நிலையை, இந்த உலகுக்கு பாலா தெரியப்படுத்தவும், நிதி உதவி கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்தது.. இந்த 2020 அளவுக்கு அதிகமான கஷ்டங்களை மக்களுக்கு தந்துவிட்டது.. மனிதாபிமானத்தின் எல்லைகள் மீறப்பட்டு, சிலஉயிர்களையும் பறித்து சென்றதை மறக்க முடியவில்லை.. இறுதியில் எல்லாவற்றையும் வென்றுவிடுகிறது இந்த "பசி" !