சென்னையில் மதியம் 2 மணிவரைதான் கடை திறந்திருக்கும்.. வெள்ளையன் அதிரடி அறிவிப்பு
சென்னை: சென்னையில் நாளை முதல், கடைகள் திறந்திருக்கும் நேர விவகாரத்தில் வணிகர் சங்கங்கள் இடையே கருத்துவேற்றுமை நிலவுவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து அங்கு ஊரடங்கு கெடுபிடிகளை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்ட தமிழ்நாடு மருத்துவ நிபுணர் குழுவினர் சென்னையில் ஊரடங்கு தளர்வுகளை மாற்றியமைக்க வேண்டும். கெடுபிடிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு.. அரசு அதிரடி அறிவிப்பு
மதியம் 2 மணிவரை மட்டுமே
இந்த நிலையில் நாளை முதல், வரும் 30ம் தேதிவரை, மதியம் 2 மணிவரைதான் சென்னையில், கடைகள் திறந்து இருக்கும் என்று வெள்ளையன் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். கொரோனா பரவலை குறைப்பதற்காக, இப்படி ஒரு நேரக் கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்படுவதாக, வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்திருந்தார்.
விக்கிரமராஜா மாற்றுக் கருத்து
வெள்ளையன் இவ்வாறு ஒரு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, இதுபோல எந்த ஒரு நடைமுறையையும் தங்கள் வணிகர் சங்கம் பின்பற்றாது என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அரசு ஒரு குறிப்பிட்ட அளவுக்கான காலக்கெடுவை கொடுத்துள்ள நிலையில், வணிகர்களாக ஒரு முடிவெடுத்து குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது.
இரவு 8 மணிவரை திறந்திரு்ககும்
அரசின் நிலைப்பாட்டுக்குதான் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவளிக்கும். எனவே, எப்போதும் போல தமிழக அரசு அறிவிப்பின்படி கடைகள் திறந்து இருக்கும். மக்களை குழப்பத்திற்குள் தள்ள நாங்கள் விரும்பவில்லை. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மளிகை கடைகள் திறந்திருக்கும்.
குழப்பம் வேண்டாம்
பிற கடைகள், அதாவது எலக்ட்ரானிக், ஹார்டுவேர் உள்ளிட்ட கடைகள், அரசு அறிவித்த நேரப்படி தொடர்ந்து இயங்கும். மளிகைக் கடைகள் கட்டாயமாக இரவு 8 மணிவரை திறந்திருக்கும். எனவே மக்கள் குழப்பமடைய வேண்டாம். இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார். வெள்ளையன் சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு நலமோடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.