அம்பயர் தப்பு செய்துவிட்டார்.. ரெப்ரியிடம் பஞ்சாப் அணி பரபர புகார்! டெல்லி தோற்றதாக அறிவிக்கப்படுமா?
சென்னை: அம்பயர் செய்த தவறால் இழந்த வெற்றியை திரும்பப் பெறுவதில் உறுதியாக இருக்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
ஒருவேளை அம்பயர் முடிவு திரும்பப் பெறப்பட்டால், நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக, நடைபெற்ற போட்டியின் முடிவு மாறிவிடும். பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இரண்டு ரன்கள் ஓடிய இடத்தில் ஒரு ரன் மட்டுமே நடுவர் வழங்கியதாகவும், பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் கிரீஸ் உள்ளே பேட்டை வைத்ததை கவனிக்காமல் இந்த தவறை நடுவர் செய்ததாகவும் தொலைக்காட்சி ரிப்ளேயில் உறுதி செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
அதே தில், அதே ஸ்டைல்.. அப்படியே யுவராஜ் சிங்கை பார்த்த ஃபீல்.. பதற விட்ட படிக்கல்.. யார் இவர்?
ஒரே மாதிரி ரன்கள்
நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி 'டை'யில் முடிந்தது உங்களுக்கே தெரியும்.
இரண்டு அணிகளும், 20 ஓவர் முடிவில் 157 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தால் போட்டி டிரா ஆனது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் பஞ்சாப் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பேட் செய்த டெல்லி அணி, எளிதாக வென்றது. ஆனால் நடுவர் தவறு செய்யாமல் அந்த ஒரு ரன்னை வழங்கியிருந்தால் பஞ்சாப் சூப்பர் ஓவர் கொண்டிருக்க தேவை இருந்திருக்காது வெற்றி பெற்றிருக்கலாம்.
மயங்க் அகர்வால்
எந்த ரன் என்கிறீர்களா.. போட்டியில் டெல்லி அணியின் வீரர் ரபாடா 19வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தில், மயங்க் அகர்வால் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்துவிட்டு 2 ரன்கள் ஓடினார். ஆனால் அதில் ஒரு ரன் ஷார்ட் ரன் என்று கள நடுவர் கூறிவிட்டார். அதாவது கிரீஸ் கோட்டை தொடாமல் மயங்க் அகர்வால் ஓடியதாக கூறி, ஒரு ரன் கொடுக்க நடுவர் மறுத்துவிட்டார்.
புகார்
இந்த நிலையில்தான் பஞ்சாப் அணியின் தலைமை செயல் அதிகாரி சதீஷ் மேனன் இன்று, கூறுகையில் இந்தத் தோல்வியின் மூலமாக நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, நடுவர் தீர்ப்புக்கு எதிராக நாங்கள் ரெப்ரியிடம் அப்பீல் செய்துள்ளோம். ஐபிஎல் போன்ற மிகப் பிரபலமான ஒரு தொடரில், மனிதத் தவறுகளால் போட்டி முடிவில் மாற்றம் ஏற்பட்டு விடக்கூடாது. எத்தனையோ டெக்னாலஜியில் உள்ளன. அதை பயன்படுத்தி நடுவர் சரிபார்த்து இருக்க முடியும். எனவே நாங்கள் மேட்ச் ரெப்ரியிடம் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போட்டி ரிசல்ட் மாறுமா?
ஒருவேளை இந்த அப்பீலில் ஒரு ரன் கொடுக்கப்பட்டால், பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் இவ்வாறு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்கிறார்கள் கிரிக்கெட் சட்ட வல்லுநர்கள்.
ஷாட் ரன் யூகங்கள்
கிரிக்கெட் ஆட்டத்தை பொறுத்தளவில் ஒரு பந்து கூட ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும். எனவே 2 ஒரு வேளை, ஷாட் ரன் என நடுவர் அறிவிக்காமல், இரண்டு ரன்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் கண்டிப்பாக பஞ்சாப் அணிதான் வெற்றி பெற்று இருக்கும் என்று யாராலும் உறுதிபட கூற முடியாது. ஒரு வேளை 2 ரன் கிடைத்துவிட்டதால் மயங்க் அகர்வால் கொஞ்சம் மெத்தனமாக ஆடியிருந்தால், பஞ்சாப் அணி இன்னும் அதிக ரன் வித்தியாசத்தில் கூட தோற்று இருக்குமே. இப்படி யூகங்கள் பலவகையாக செல்லக் கூடும். எனவே யூகத்தின் அடிப்படையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாது என்பதால் பஞ்சாப் அணியின் கோரிக்கையை புறந்தள்ள வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
அம்பயர் தவறுகள்
இருப்பினும் இதுபோன்ற புகார் பதிவு செய்யப்படுவது, அடுத்தடுத்து நடக்கக்கூடிய போட்டிகளில் நடுவர்களை மிகவும் கவனமாக செயல்படுவதை உறுதி செய்ய உதவும். நடுவர்களுக்கு எச்சரிக்கை பிறப்பிக்க இந்த புகார்கள் வசதியாக இருக்கும், என்று கூறுகிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள்.