சுபஶ்ரீ இறந்த வழக்கு.. பேனரை தடுக்காத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யுங்கள்.. ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு
Recommended Video
சென்னை: பேனர் விழுந்து சுபஶ்ரீ இறந்த வழக்கில் சட்டவிரோத பேனரை தடுக்கத் தவறிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யுமாறும் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் சுபஶ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அதனை அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும்என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ பலியான சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் லட்சுமி நாராயணன், கண்ணதாசன் ஆகியோர் முறையிட்டனர்.
எல்லா கடசிகளும் வைக்கின்றன
வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், அனைத்து அரசியல் கட்சிகளும் பேனர்கள் வைக்கின்றன எனவும், அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாகவும், தலைமைச் செயலகத்தை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றும்படி உத்தரவிடவில்லையே தவிர, அனைத்து உத்தரவுகளையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என கண்டனம் தெரிவித்தனர்.
எத்தனை பேரின் ரத்தம்
மேலும், இன்னும் எத்தனை பேரின் ரத்தம் சாலையில் தேய்க்கப்படவேண்டும் எனவும் பேனர் வைத்தால்தான் விழாக்களில் மக்கள் கலந்து கொள்கிறார்களா? இதுதான் மனித உயிருக்கு அளிக்கும் மரியாதையா என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
பேனர் வைக்க வேண்டாம்
பலியான பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கினாலும் அவரை மீண்டும் கொண்டுவர முடியுமா? எனவும், பேனர்கள் வைக்கக்கூடாது என கட்சியினருக்கு முதலமைச்சர் ஏன் அறிவுறுத்தல் வழங்கக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
எப்படி அனுமதி வழங்கப்பட்டது
அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் கட்சியினருக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்திய நீதிபதிகள், கிரீன்வேஸ் சாலை முதல் ராணிமேரி கல்லூரி வரை சாலையில் அதிமுக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது அதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகள் கேள்வி
பின்னர், வழக்கு விசாரணையை 2:15 மணிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பள்ளிக்கரணை விபத்து நடந்த பகுதி காவல்துறை அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.அதேபோல, கிரீன்வேஸ் சாலை முதல் ராணி மேரி கல்லூரி வரை கொடி அமைக்க அனுமதி வழங்கப்பட்டதா என அப்பகுதி அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்
இதையடுத்து மீண்டும் நீதிமன்றத்தில் பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பரங்கிமலை காவல் துணை ஆணையர், பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதேபோல் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் உள்ளிட்டோரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் பல முக்கிய அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
வழக்கறிஞர் பதில்
அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள், உயிர்பலி கொடுத்தால் தான் அரசு நிர்வாகம் செயல்படுமா? சுபஸ்ரீ விவகாரத்தில் விதிமீறி பேனர் வைக்க அனுமதித்தோர் மீது எடுத்த நடவடிக்கை என்ன. என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசின் வழக்கறிஞர், சுபஸ்ரீ தந்தை அளித்த புகாரில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
உங்களை தடுப்பது எது
இந்த நிலையில் வழக்கை விசாரிக்கும் காவல் ஆய்வாளர்களிடம் நீதிபதிகள் எப்போது தகவல் வந்தது? எத்தனை பேனர்கள் இருந்தது என்று நேரடியாக சரமாரியாக கேள்வி எழுப்பினர், மேலும் லாரியின் ஓட்டுனர் மீது என்ன வழக்கு என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பேனரில் இடம் பெற்று இருந்த வண்ணம் (அதிமுக) உங்களை தடுத்ததா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இடைக்கால நிவாரணம்
இதனை தொடர்நது பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு அரசு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அந்த தொகையை அதிகாரிகளிடம் இருந்து பெற்று தர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சட்டவிரோத பேனரை தடுக்கத் தவறிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யுமாறும் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.