வேகமெடுக்குது கொரோனா “பூஸ்டர் டோஸ் போடுங்க” கட்டாயம் போடவேண்டியது இவ்வளவு பேரா? அரசு அறிவுறுத்தல்!
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், 17.96 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2 டோஸ் தடுப்பூசி போட்டும் பாதிப்பு! திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி! அதுவும் 2வது முறை!
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு ஒரே நாளில் 1,359-ஆக அதிகரித்தது. தமிழகத்தில் 355 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ள நிலையில், தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மீண்டும் அதிகரிப்பு
கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. கொரோனா பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டன. எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கட்டுப்படுத்த
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், கொரோனா தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டோர், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தடுப்பூசி
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், "தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அப்படியென்றால், மக்களிடையே நோய் எதிர்ப்பு திறன் குறைந்துள்ளது என அர்த்தம். அதனால், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்துகிறோம். 2 தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் நிறைவடைந்த, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
பூஸ்டர் டோஸ்
குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் பூஸ்டர் தவணை தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மொத்தம் 30.27 லட்சம் பேரில் 12.31 லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். 17.96 லட்சம் பேர் இன்னும் பூஸ்டர் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை. அவர்கள் உடனடியாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
எந்த வகை கொரோனாவாக இருந்தாலும்
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால், ஒமைக்ரானின் பிஏ-5 வகை உள்ளிட்ட எந்த வகையான கொரோனா வைரஸ் வந்தாலும், தீவிர உடல்நலப் பாதிப்பு மற்றும் உயிரிழப்பைத் தடுக்க முடியும். எனவே, சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.