சித்தா படிப்புகளுக்கு நீட் உண்டா?... இல்லையா?... அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் இதுதான்
சென்னை: சித்தா படிப்புகளுக்கு நீட் உண்டா இல்லையா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தலைப்பில் 5 வது தேசிய கருத்தரங்கத்தை இந்திய மருத்துவ சட்ட மற்றும் நெறிமுறைகள் சங்கம் நடத்தியது. இந்த விழாவின் தொடக்க நிகழ்வில் டாக்டர் . எம்.ஜி.ஆர் துணை வேந்தர் சுதா சேசையன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கடந்த ஆண்டு மருத்துவ துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது...
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதற்கான தீர்வுகள் தொடர்பாக, மருத்துவர்களிடம் முழுமையான விழிப்பணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.
மேலும், பாதிக்கும் நபர்களுக்கு சட்டம், நீதி கிடைப்பது தொடர்பாக விவாதிக்கிறோம் என்ற அவர், குற்றம், வன்கொடுமை குறைய வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டார்.
குடிநீர் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, பெரும்பாலும் அந்த பிரச்சனை இருக்கிறது. அரசு மருத்துவமனையில் இதை கவனிக்க ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளோம் எனவும், தண்ணீர் பிரச்சனை ஏற்படாமல் மருத்துவர்கள் கவனித்து வருவதாக தெரிவித்தார். சித்தா படிப்புகளுக்கு நீட் உண்டா இல்லையா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.
முன்னதாக, நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். 7 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட கேரள எல்லையோர மாவட்டங்களுக்கு கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நிபா அறிகுறிகள் என்ன எனக்கேட்டு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு மருத்துவக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உரிய முறையில் விளக்கம் அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.