"டேய் தம்பி.. தாத்தா சொல்றதை கேளுடா.. அழிஞ்சு போகாதீங்கடா".. மறக்க முடியாத டாக்டர் சிவராஜ்!
சென்னை: இப்படி ஒரு சித்த டாக்டரை தமிழகம் இதுவரை கண்டதில்லை.. சித்த வைத்தியர் சிவராஜின் பேச்சும், அதன் வீரியமும் இன்றுவரை குறைந்ததுமில்லை..!
ராத்திரி நேரங்களில் டிவியில் பேசும் டாக்டர்கள் என்றாலே, கண்முன் வந்து நிற்பவர் சிவராஜ்தான்.. 90-களில் அதுவும் டிவி சேனல்கள் வந்த புதிதில் இவர்தான் எல்லா சேனல்களிலும் நிறைந்திருப்பார்.
புதிதாக உரிமம் வாங்கி தொடங்கப்பட்ட பல டிவி-க்களுக்கு அப்போது போதிய விளம்பரங்கள் இல்லை.. புது சேனல் என்பதால், மக்களிடம் போதிய வரவேற்பு கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.. அதுபோன்ற நேரங்களில், கை கொடுத்து உதவியது இதுபோன்ற சித்த டாக்டர்கள்தான். இப்போதும் இவர்களின் இருத்தல் தொடர்ந்து இருந்து வருகிறது.
சிவராஜ்
அதில் முதன்மையானவர் சிவராஜ் என்றே சொல்லலாம்.. ஏதோ குறுக்கு வழியில் வைத்திய துறைக்கு வந்தவர் இல்லை.. 7 தலைமுறை வைத்தியம் செய்தவர்கள் என்பதை மறக்காமல், தன்னுடைய ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் அப்பட்டமாக வெளிப்படுத்தி தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர்... அதன்மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையை பெற்றவர். அந்த நம்பிக்கையின் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் நல்வாழ்க்கை வாழ காரணமாக இருந்தவர்.
தலைமையிடம்
சேலத்தை தலைமையிடமாக கொண்டு சிவராஜ் சித்த வைத்தியர் சாலை இயங்கி வருகிறது... இந்த சித்த மருத்துவத்தில் எல்லாவிதமான நோய்களுக்கும் மருந்துகள் கிடைக்கும்.. அதற்கு காரணம் 206 வருஷங்களுக்கு மேலாக இந்த குடும்பம் சித்த வைத்தியத்தில் சாதனை புரிந்து வந்துள்ளது என்பதே ஆகும்.. வேறு யாருக்கும் இப்படி ஒரு சிறப்பு இதுவரை கிடைத்தது இல்லை.
ஒழுக்கம்
சேலம் என்றில்லை, தமிழகத்தின் மாவட்டங்களில் எல்லாம் சிவராஜ் சிவகுமார் வைத்தியம் பார்ப்பார்... அனைத்துவிதமான நோய்களுக்கும் தீர்வு தரப்படும் என்றாலும் சிவராஜ் தேர்ந்தெடுத்தது ஆண்மை குறைவு பற்றின பிரச்சனையை.. இதற்கு காரணம், இளைய சமுதாயத்தின் ஒழுக்க சிதறல்கள்தான்.. 20 வருடத்துக்கு முந்தைய காலத்தைவிட இப்போது, பல இளைஞர்களின் பாதை தவறான பாதையில் செல்ல ஆரம்பித்தது.. மனம் தறிகெட்டு அலைந்து, பலவித கோளாறுகளில் இளம் வயதிலேயே இளைஞர்கள் சிக்கி கொள்ளும் ஆபத்தும் சூழ்ந்தது.
கண்டிப்பு
இதை மையமாக வைத்துதான், ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சிக்கான சித்த மருத்துவத்தில் இவர் அதிக அளவு கவனம் செலுத்தினார்.. இதைதான் பல டிவிக்களிலும் பங்கேற்று பேசி வந்தார்... மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளித்து வந்தார்.. ஆனால், இவர் பேசும் பாணி வித்தியாசமானது... டாக்டர் போலவே இருக்காது, ஏதோ நம்ம வீட்டில் உள்ள ஒரு உறவு கண்டிப்பது போலவே இருக்கும். சுய இன்பம், வயது மூத்த பெண்களிடம் உறவு இன்னபிற சமாச்சாரங்களை வைத்து, அப்படி செய்பவர்களை மோசமாக திட்டியும் விடுவார்.
உடல்நிலை
"டேய் தம்பி.. தாத்தா சொல்றதை கேளுடா.. இந்த 75 வயசுல நான் வந்து பேசற விஷயமா இது.. இதை இந்த நிகழ்ச்சி மூலமாக நான் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இருக்கா? மனசு நொந்து போய், வேதனைப்பட்டு, ரணப்பட்டு, உங்களுக்காக இந்த நிகழ்ச்சியில் நான் சொல்லிட்டு வந்துட்டு இருக்கேன்.. புரியுதா? இல்லையாடா கண்ணுங்களா? உடம்பை ஏன்டா இப்படி கெடுத்துக்கறீங்க? நல்லபடியா பார்த்துக்கிட்டு, விந்துவை வாழ்நாளெல்லாம் சேகரிச்சு பத்திரப்படுத்தி வெச்சுக்கிட்டு, மகிழ்ச்சி காலெமெல்லாம் குடும்பம், குழந்தைங்களோடு ஆரோக்கியமா நீங்க வாழணும்னுதானே இந்த தாத்தாவுக்கு ஆசை?
பேரன்
படுபாவிங்களா.. சுகத்துக்காக ஏன் இப்படி சக்தியை வீண் பண்ணி தொலையறீங்களா? நான் என்ன ஒருநாள், 2 நாளா இப்படி சொல்லிட்டு இருக்கேன்.. எத்தனை வருஷமா சொல்லிட்டு இருக்கேன். நீங்க எல்லாரும் என் பேரனுங்களாகிட்டீங்க.. உங்களை நான் என்ன சொல்ல முடியும்? திட்டி பார்க்கிறேன், சண்டை போட்டு சொல்லி பார்க்கிறேன், கெஞ்சி பேசி பார்க்கிறேன்.. கடைசியா அழுதுகூட பார்த்துட்டேன்..தப்பு செய்யாதீங்கடா, சக்தியை சேகரிச்சு வைங்க.. அப்பதான் மனைவி கிட்ட ஜெயிக்க முடியும்.. அப்பதான் வாழ்க்கையிலும் ஜெயிக்க முடியும்..ன்னு சொல்றேன்.. நான் பணத்தை சம்பாதிக்கவா இந்த நிகழ்ச்சியை பண்றேன்?" என்ற இவரது உரிமை பேச்சில் அத்தனை இளைஞர்களும் விழுந்தே போனார்கள்.
பேச்சு
காசு, வியாபாரம், யுக்தி என்று எப்படி இந்த பேச்சை எடுத்து கொண்டாலும், இவரது நோக்கம் முற்றிலுமாக சுயநலமானது என்று ஒதுக்கி தள்ளிவிட முடியாது..வெறும் வியாபார பேச்சு என்றால், இத்தனை நாள் வரை இந்த சமூகம் இவரை அங்கீகரித்திருக்காது..
தாத்தா
உச்சி முதல் உள்ளங்கால் வரையான நாடி, நரம்புகள் அனைத்தும் ஒரு சீராக வலுவுடன் இருக்கும் ஆதாயத்தை ஓயாமல் சொன்னவர் இந்த வைத்தியர்.. "உங்க வீட்டுக்குத் தெரியாமல் நான் உங்களை குணப்படுத்துகிறேன்.." என்ற இவரது அதீத அக்கறை மேலும் வெளிப்பட்டது. அதனால்தான் இளைஞர்கள் இவரை அளவுக்கு அதிகமாக நம்பி சென்று குணமடைந்தனர். இப்படி உரிமையாக கண்டிக்க இளைஞர்களுக்கு இதுபோல, இன்னொரு தாத்தா வரப்போவதில்லை..!