உழைப்பாளி உணவகம்... உழைப்பாளி மருத்துவமனை... ரஜினிகாந்த் கட்சியில் சித்தமருத்துவர் வீரபாபு..?
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளை சித்த மருத்துவம் மூலம் குணப்படுத்திய சித்த மருத்துவர் வீரபாபு இப்போது சொந்தமாக மருத்துவமனை ஒன்றை திறந்திருக்கிறார்.
அந்த மருத்துவமனைக்கு அவர் சூட்டியிருக்கும் பெயர் உழைப்பாளி. ரஜினிகாந்தின் ரசிகரான இவர் ஏற்கனவே உழைப்பாளி உணவகம் என்ற பெயரில் சிறிய கேண்டீன் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் அதில் வீரபாபு இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
"ரவுடிகளை வைத்து மிரட்டறீங்களா".. ஒரு பக்கம் ஸ்டாலின், மறுபக்கம் கனிமொழி.. தூத்துக்குடியில் சிக்கல்!
சித்த மருத்துவம்
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சித்த மருத்துவர் வீரபாபு, சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இப்போது சொந்தமாக உழைப்பாளி என்ற பெயரில் மருத்துவமனை தொடங்கியுள்ள அவர் அங்கு வரும் நோயாளிகளிடம் ரூ.10 மட்டுமே சிகிச்சை கட்டணமாக வசூலிக்கிறார்.
ரஜினி ரசிகர்
நடிகர் ரஜினிகாந்தின் ரசிகரான வீரபாபு ஏற்கனவே உழைப்பாளி உணவகம் என்ற பெயரில் கேண்டீன் நடத்தி வருவதோடு அங்கு சாப்பிட வருபவர்களிடம் ரூ.10 மட்டுமே கட்டணம் வசூலித்து வருகிறார். தனது உணவகம், மருத்துவமனை ஆகிய இரண்டிற்குமே ரஜினிகாந்த் திரைப்படமான 'உழைப்பாளி' என்பதையே பெயராக சூட்டியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் தனக்கு நெருக்கமான சிலரிடம் ரஜினிகாந்த் பற்றி அவ்வப்போது அவர் சிலாகித்து பேசுவதுண்டு.
தொலைபேசி மூலம்
இதனிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், திடீரென ஒரு நாள் சித்தமருத்துவர் வீரபாபுவை தொலைபேசி மூலம் அழைத்துப் பேசிய ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருந்தார். இது வீரபாபுவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததோடு ரஜினி உடன் நிகழ்த்திய உரையாடல் அவரை அடுத்தக்கட்டத்தை நோக்கி சிந்திக்க வைத்திருக்கிறது.
ரஜினியுடன் இணைவார்
தற்போது உழைப்பாளி மருத்துவமனை மூலம் கொரோனா உள்ளிட்ட பல நோய்களுக்கும் சித்த மருத்துவம் அளித்து வரும் வீரபாபு, விரைவில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது. மேலும், ரஜினி கட்சி தொடங்கினால் அதில் இணைந்து பணியாற்றும் எண்ணமும் மருத்துவர் வீரபாபுவிடம் உள்ளதாக கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.