Silamboli Chellappan : சிலப்பதிகாரத்தை பட்டி தொட்டியெங்கும் பரப்பிய சிலம்பொலி செல்லப்பன் மறைந்தார்!
Recommended Video
சென்னை: சிலப்பதிகாரத்தை பட்டி தொட்டியெங்கும் பரப்பிய சிலம்பொலி செல்லப்பன் மறைந்தார். அவருக்கு வயது 90.
நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தில் செப் 24, 1928-இல் பிறந்தவர் செல்லப்பன். சுப்பராயன்- பழனியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். எம் ஏ தமிழ் படித்துவிட்டு கணித ஆசிரியராக தனது பணியை தொடங்கிய அவர் பாவேந்தர் பாரதிதாசன் விருதை பெற்றார்.
சிலம்பொலி அணிந்துரைகள் என்ற நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். சிலப்பதிகார அறக்கட்டளையை தொடங்கியவர்.
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர், உலக தமிழ் மாநாட்டு உதவி அலுவலர் பதவிகளை அவர் வகித்துள்ளார். 60 ஆண்டுகளுக்கு மேலாக சிலப்பதிகாரத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர்
சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கிய தேன் உள்பட பல நூல்களை எழுதியவர். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்னையில் காலமானார். இவருக்கு மனைவி செல்லம்மாள், 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். செல்லப்பனின் மறைவுக்கு பல்வேறு எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.