தம்பிதுரை அடங்கிப் போவாரா அத்து மீறுவாரா... அதிமுகவில் மீண்டும் விரிசலா?
சென்னை: தம்பிதுரையை வைத்து அதிமுகவில் ஒரு பெரிய பூசல் வெடிக்கும் என்று பேச்சு எழுந்துள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி அமையுமா என்ற கேள்வி இருந்த நிலையில் அமைச்சர்கள் பலரும் தமிழகத்தின் நலன் காக்கும் தேசியக் கட்சியோடு கூட்டணி என்று கூறிவந்தனர். அதே வேளையில் பாஜக தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று சட்டமன்றத்தில் குரலெழுப்பினார் துணை முதலமைச்சர். இப்படி இவர்கள் இருவரும் எப்படி ஒருவரை ஒருவர் கழுவி கழுவி ஊற்றினார்கள் என்பதை தனியாக பார்க்கலாம்.
இப்போது நேற்று இரவு சென்னைக்கு பறந்து வந்த மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியுஸ் கோயல் அதிமுகவின் சீனியர் அமைச்சர்களான தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோரோடு பலமணி நேரம் அமர்ந்து பேசி கூட்டணியை உறுதி செய்துவிட்டார். ஆனால் யாருக்கு எத்தனை தொகுதி எந்த தொகுதி என்பதில் இன்னமும் இழுபறி இருக்கிறது. இதனால் கூட்டணி பேச்சு வார்த்தை முழு வடிவம் பெறவில்லை. ஆனால் மார்ச் ஒன்றாம்தேதி பிரதமர் மறுபடியும் தமிழகத்திற்கு வருமுன்னர் இந்த பேச்சு வார்த்தைகள் முழு வடிவம் பெற்று விடும் என்று உறுதியாக நமப்படுகிறது.
இந்த நிலையில் மேக்கேதாட்டு பிரச்சனை முதல் தமிழகத்திற்கு எதிராக பாஜக எடுத்த முடிவுகளை கடுமையாக விமர்சித்து வந்தவர் மக்களவை துணை சபாநயாகர் தம்பிதுரை. பாஜகவை தூக்கி சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்தவர்களா என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். தற்போது வெளிவந்த பாஜகவின் இடைக்கால பட்ஜெட்டையும் பாஜகவின் தேர்தல் அறிக்கை என்று விமர்சித்தார். தம்பிதுரை மட்டுமல்லாது பல எம்.பிக்களுக்கும் இதே மனநிலையில்தான் இருந்தனர். ஏன் ஓ.பி எஸ் கூட இதே மன நிலையில்தான் இருந்து வந்தார். நிர்மலா சீதாராமன், ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் தன்னை சந்திக்காமல் வாசலிலேயே காத்திருக்க வைத்து திருப்பி அனுப்பிய வடு இன்னமும் அவரிடமிருந்து போகவில்லை. இப்படி அதிமுகவில் பல தலைவர்களும் பாஜகவை நாம் ஏன் தூக்கி சுமக்க வேண்டும் என்று இருந்த நிலையில் நேற்றிரவு அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது.
இன்று காலை வந்தே பாரத் என்ற சிறப்பு ரெயில் டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் பியுஸ் கோயலும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த சூழலிலும் நேற்றிரவு கூட்டணிக்காக பறந்து வந்து அதிமுக தலைவர்களோடு பியுஸ் கோயல் பேசிச் சென்றுள்ளார். இந்த நிலையில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த தம்பி துரை தொடர்ந்து கட்சியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தம்பிதுரை தொடர்ந்து அதிமுகவில் நீடித்தால் அவருக்கு கட்சிப்பதவி கூட இருக்குமா என்பது கேள்விக்குறியே.
ஏன் எனில் சில நாட்களுக்கு முன்னர் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா பாஜக தலைமையில்தான் கூட்டணி என்றெல்லாம் அழுத்தம் திருத்தமாக கூறிவந்தார். ஆகவே இப்போது யார் தலைமையில் என்பதை விட கூட்டணி உறுதியாகிவிட்டதால் தொகுதிப் பங்கீட்டில் பாஜக தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை பெறுவதில் அழுத்தம் திருத்தமாக தங்கள் நிலைப்பாட்டில் நின்று அதிமுகவுக்கும் அதன் தலைமைக்கும் உரிய “அழுத்தத்தை” உரிய முறையில் கொடுப்பார்கள். அதோடு நின்று விடாமல் அதிமுக போட்டியிடப் போகும் தொகுதிகளிலும் யார் யார் வேட்பாளர்கள் என்பதையும் முடிவு செய்ய துடிக்கும். அதற்கு பாஜக தரப்பில் இருந்து கொடுக்கப்படும் உரிய “அழுத்தத்தால்” அதிமுக தலைமையும் ஒத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம். ஆகவே தம்பிதுரை அதிமுகவில் நீடித்தாலும் கரூர் தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.
இந்த நிலையில் நேற்றோடு அதிமுகவில் விருப்ப மனு அளிப்பதற்கான கடைசித் தேதி முடிவடைந்து விட்டது. நேற்று திடீரென்று சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார். கரூர் தொகுதியில் தொடர்ந்து தம்பிதுரை போட்டியிட்டு வரும் நிலையில் சின்னத்தம்பி விருப்ப மனு அளித்திருப்பது தம்பிதுரைக்கான இடம் கரூரில் இல்லை என்பதை கூறுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய தம்பிதுரையும் கரூரில் தான் போட்டியிட வாய்ப்பு உறுதியாக கிடைக்குமா என்று தெரியாது என்று கூறியுள்ளார்.
அதிமுகவில் தம்பிதுரைக்கு இப்படி ஒரு நிலை வரும்பட்சத்தில் அவர் கட்சியில் தொடர்ந்து நீடிப்பது சந்தேகமே என்கிறார்கள் அதிமுக உள்விவரம் அறிந்தவர்கள்.
இவ்வளவு காலம் தங்களை மானாவாரியாக கழுவிக் கழுவி ஊற்றிய தம்பிதுரையை அரவணைக்க பாஜக ஒன்றும் ஜென் நிலையில் உள்ள கட்சி அல்ல. ஆகவே தம்பிதுரை ஓ.பன்னீர்செல்வம் போல ஒரு தர்மயுத்தம் நடத்த வாய்ப்பு அதிகம். அது தேர்தலுக்கு முன்பா அல்லது தேர்தலுக்கு பின்னரா என்பதுதான் கேள்வியே. அப்படி தேர்தலுக்கு பின்னர் என்றால் தம்பிதுரை, அன்வர்ராஜா, கடம்பூர் ராஜூ போன்றவர்கள் தேர்தலின்போது அதிமுகவுக்கும் பாஜகாவுக்கும் எந்த அளவில் உண்மையாக தேர்தல் பணியாற்றுவார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.