மரணத்திலுமா இப்படி ஒரு ஒற்றுமை.. நண்பர் கருணாநிதி இறந்த அதே தேதியில் காலமான அன்பழகன்!
சென்னை: அரசியலில் ஒன்றாகவே பயணித்த கருணாநிதியும் அன்பழகனும் தங்கள் மறைவிலும் ஒற்றுமையை கடைபிடித்துள்ளனர் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
Recommended Video
திராவிட கொள்கைகளில் அதிகம் நாட்டம் கொண்டவர்களில் பெரியார், அண்ணாவுக்கு பிறகு மிக முக்கியமானவர் கருணாநிதி. இவர் எழுத்தாளர், திரைப்பட கதாசிரியர், இலக்கியவாதி, அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி என பன்முகத் தன்மை கொண்டவர்.
இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு நீண்ட நாள் உடல்நிலை பாதிப்பு காரணமாக இயற்கை எய்தினார். அது போல் திராவிட இயக்கத்தின் காற்றை தன் வாழ்நாள் முழுவதும் சுவாசித்தவர் க அன்பழகன். இவர் கடந்த சில நாட்களாக வயோதிக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றைய தினம் இயற்கை எய்தினார்.
அன்பழகன்
இந்த நிலையில் கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை பார்ப்போம். கருணாநிதியும் அன்பழகனும் பட்டுக்கோட்டை அழகிரிசாமி இறந்தபோது அவருக்கான மாநாட்டில் பங்கேற்று, கடைசி காலத்தில் அழகிரிசாமியை திராவிடர் கழகம் முறையாக கவனிக்கவில்லை என்றனர். இதனால் பெரியாரின் கோபத்திற்கு ஆளாகி இருவரையும் தி.க. கூட்டங்களில் பேச தடைவிதித்தார்.
திமுக உதயம்
திராவிடர் கழகம் உடைந்து திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. இருவரும் ஒன்றாகவே இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள். இருவரும் தமிழின மக்களுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள். கருணாநிதியும் அன்பழகனும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர். அவர்களது பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் பெரியப்பா, சித்தப்பா என உறவு முறை கூறியே அழைத்துக் கொண்டனர்.
அன்பழகன்
இருவருமே சிறந்த பேச்சாளர்கள், சிறந்த எழுத்தாளர்கள். கருணாநிதியை போல் அன்பழகனும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அதிலும் விடுதலை, உரிமை, தமிழ், தமிழர் குறித்தே எழுதியுள்ளார் பேராசிரியர். கருணாநிதியால் இனமான பேராசிரியரே என அன்புடன் அழைக்கப்பட்டவர் அன்பழகன். கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் ஒரே மாதிரியான மன ஓட்டமும் உண்டு.
கருணாநிதி
1984-ஆம் ஆண்டு ஈழ பிரச்சினைக்காக மத்திய மாநில அரசுகளை கண்டித்து கருணாநிதியும் அன்பழகனும் தங்கள் எம்எல்ஏ பதவிகளை துறந்தனர். கட்சி கூட்டங்கள், விழாக்களிலும் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி புகழ்ந்து கொள்வர். தன்னை விட வயதில் சிறியவராக இருந்தாலும் கருணாநிதியை தலைவராக ஏற்றுக் கொண்டவர் அன்பழகன்.
இறப்பிலும்..
இத்தகைய நட்புணர்வை கொண்ட இருவரும் பிறப்பிலும் இறப்பிலும் ஒன்று போல் இருந்துள்ளனர். ஆம் கருணாநிதி 1924-ஆம் ஆண்டு பிறந்துள்ளார். அன்பழகனோ 1922-ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இருவருக்கும் இரு வயதுகள் வித்தியாசம். அது போல் கருணாநிதி கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி இறந்தார். அது போல் அன்பழகனோ 2020-ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி இயற்கை எய்தினார். இருவரும் ஒரே தேதிகளில் இறந்துள்ளனர். இறப்பிலும் இரு ஆண்டுகள் வித்தியாசம் கொண்டுள்ளனர்.