அதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ? இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை! பலே பிளான்!
சென்னை: நிர்வாக வசதிக்காக திமுகவும், அதிமுகவும் மாவட்டங்களை பிரிப்பதாக கூறினாலும் நிர்வாகிகளுக்கு வசதிக்காகவே பிரிப்பதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிருப்தியை சமாளிக்கவே இப்படி செய்வதாக கூறப்படுகிறது. மாவட்டங்கள் பிரிப்பு, நிர்வாகிகளை சமாதானம் செய்யும் விஷயத்தில் அதிமுக, திமுக இடையே ஒரே அணுகு முறை மற்றும் ஒற்றுமை காணப்படுகிறது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் திமுகவும், அதிமுகவும் சோர்ந்து கிடக்கும் மற்றும் அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிளை குஷிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன் மூலம் தேர்தலின் போது கோஷ்டி பூசலோ அதிருப்தியோ ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன. இதற்காக இரு கட்சிகளும் இதுவரை இல்லாத ஒன்றாக கட்சியின் மாவட்டங்களை இரண்டாக பிரித்து ஒருவருக்கு புதிதாக பொறுப்புகளை வழங்கி வருகின்றன.
பெரிய மாவட்டங்கள் பிரிப்பு
இப்படி முதலில் செய்ய தொடங்கியது திமுக தான். தமிழகத்தின் பல்வேறு பெரிய மாவட்டங்களை இரண்டாக பிரித்தது. இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டம், அதற்கு ஒரு பொறுப்பாளர் என்று நியமித்தது. இதன்படி 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, சென்னை, வேலூர், திருச்சி, விருதுநகர் உள்பட பல பெரிய மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
சிறிய மாவட்டங்கள்
இதேபோல் சிறிய மாவட்டங்களையும் இரண்டாக பிரித்தது. அதற்கும் பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்து வருகிறது.. அண்மையில் தேனியை இரண்டாக பிரித்து தங்கதமிழ்செல்வனுக்கு போஸ்டிங் கொடுத்த திமுக, கடைசியாக தர்மபுரி மாவட்டத்தை இரண்டாக பிரித்தது. தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தடங்கம் சுப்பிரமணி நியமதித்துள்ளது. தருமபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பி.என்.பி.இன்பசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை 6 ஆக பிரிப்பு
இதேபோல் நேற்று அதிமுக நிர்வாக வசதிக்காக சென்னையை புதிதாக 6 மாவட்டங்களாக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக ( ராயபுரம், திருவிக நகர் தொகுதிகள்) டி ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வட சென்னை தெற்கு (மேற்கு): (எழும்பூர், துறைமுகம் தொகுதிகள்) மாவட்ட செயலாளராக நா.பாலகங்கா நியமிக்கப்பட்டார்.
அதிமுகவில் போஸ்டிங்
தென் சென்னை வடக்கு (கிழக்கு): (சேப்பாக்கம் =திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு) மாவட்ட செயலாளராக ஆதிராஜாராம் நியமிக்கப்பட்டார். தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக: (தியாகராயநகர், அண்ணாநகர்) தி நகர். சத்யா எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார். தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக ( மயிலாப்பூர், வேளச்சேரி) எம் கே அசோக் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக (விருகம்பாக்கம், சைதாப்பேட்டை) விருகை ரவி எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.
வரப்போகும் பொறுப்பு
அதிமுக, திமுக இரு கட்சியிலும் நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால், பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் அடிப்படையில் கட்சியில் நிர்வாகிகள் நியமனமும் அதிக அளவில் நடைபெறப்போகிறது. தேர்தல் நேரத்தில் இப்படி பலருக்கு போஸ்டிங் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி, நிர்வாகிகளை ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற இரு கட்சிகளும் விரும்புகின்றன. எனவே விரைவில் இதுபற்றி அறிவிப்பு வரலாம். பலருக்கு பெரிய அளவில் போஸ்டிங் கிடைக்கப்போவதால் திமுக, அதிமுக இரண்டு கட்சி நிர்வாகிகளும் குஷியாக உள்ளனர்.