சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின்.. அறிவாயலத்தில் குவியும் விருப்பமனுக்கள்!
சென்னை: சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிட சிம்லா முத்துச்சோழன் விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கு முன்னர் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் உள்ளாட்சி பணிகள் நடைபெறாமல் இருந்தது. இது தொடர்பாக திமுக வழக்கு தொடுத்தது.
இந்த நிலையில் நீதிமன்றம் தலையிட்டவுடன் இந்த ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்தது. இதனால் உள்ளாட்சி தேர்தல் பணிகளை அதிமுகவும், திமுகவும் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இரு கட்சிகளும் விருப்ப மனுக்களை பெறும் நிகழ்வை தொடங்கி வைத்துள்ளன. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என கோரி திமுக நிர்வாகிகள் விருப்பமனுக்களை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து உதயநிதியிடம் கேட்டதற்கு அப்பா ஸ்டாலின் போட்டியிடுமாறு கூறினால் நான் போட்டியிட தயார் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உதயநிதி போட்டியிட வேண்டும் என சிம்லா முத்துச்சோழனும் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவர் மாதவரத்திலுள்ள சென்னை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் விருப்ப மனுவை வழங்கினார். விக்கிரவாண்டி எம்எல்ஏ தொகுதியில் உதயநிதி போட்டியிட வேண்டும் என கள்ளக்குறிச்சி எம்பி கவுதம சிகாமணி விருப்பமனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.