விவேக்கிற்கு இதய துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போனது.. சிம்ஸ் மருத்துவர் விளக்கம்
சென்னை: விவேக்கிற்கு நேற்று இரவு முதல் ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே சென்றது, மூச்சு இல்லாமல், இதயத் துடிப்பு குறைந்து கொண்டே சென்றது என அவருக்கு சிகிச்சை அளித்த சிம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் மருத்துவர் ராஜு சிவசாமி தனியார் இணையதளம் ஒன்றிக்கு பேட்டி அளிக்கையில் நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்த போது 24 மணி நேரம் கழித்துதான் விவேக்கின் உடல்நிலை குறித்து எதையும் உறுதியாக சொல்ல முடியும் என கூறியிருந்தோம்.
ஆனால் எக்மோ செய்த 6 மணி நேரம் கழித்து அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. மூச்சு இல்லை. மற்ற உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் இல்லை. இதையடுத்து நேற்று காலை 4.40 மணிக்கு விவேக்கின் உயிர் பிரிந்தது.
மாரடைப்பு
விவேக்கின் குடும்பத்தினர் அவரை 15 நிமிடங்களுக்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பொதுவாக 3 நிமிடங்களில் வந்தால் இது போன்ற நோயாளிகளை பிழைக்க வைக்க வாய்ப்பு உண்டு. மாரடைப்பின் போது மூளையில் இருக்கும் ரத்தக் குழாய்கள் ரத்த ஓட்டம் இல்லாமல் நின்றால் 3 முதல் 5 நிமிடங்கள் தாங்கும். இந்த 5 நிமிடங்களை தாண்டி செல்வோரின் நினைவை திரும்ப கொண்டு வருவது மிகவும் கடினமான விஷயமாகும்.
உடல்நிலை
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 12 மணி முதல் 2 மணி வரை அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்தோம். பின்னர் அவருடைய குடும்பத்தினரை அழைத்து விவேக்கின் உடல்நிலை குறித்து விளக்கினோம்.
காப்பாற்ற முடியவில்லை
நேற்று அதிகாலை 4 மணிக்கு பிறகு அவருடைய இதயத் துடிப்பு குறைந்து கொண்டே வந்தது. ஒரு மணி நேரம் இதய துடிப்பு நின்று இருந்ததால் இதயம் பலவீனமடைந்திருந்தது. இதனால் அவரை காப்பாற்ற இயலாத சூழல் ஏற்பட்டு அவர் மரணமடைந்தார்.
விவேக்கின் மாரடைப்பு
கொரோனா தடுப்பூசிக்கும் விவேக்கின் மாரடைப்பிற்கு எந்த தொடர்பும் இல்லை. 100 சதவீதம் அடைப்பு என்பது ஒரே நாளில் ஏற்படாது. கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டிருந்திருக்கலாம். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது உடலை முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர் தெரிவித்தார்.