கோடநாடு எஸ்டேட் விவகாரம்.. பணியில் இருக்கும் நீதிபதியை கொண்டு நீதி விசாரணை: திருநாவுக்கரசர் பேட்டி
Recommended Video
சென்னை: அகில இந்திய தேசிய மகிளா காங்கிரஸ் செயலாளர் அப்சரா ரெட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரை நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் கூறியதாவது: அப்சரா ரெட்டியை காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அப்சரா நிச்சயம் துணை நிற்பார்.
திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாகவே அனைவரின் விருப்பத்தை கேட்டு அறிந்து தேதியை அறிவிதிருக்க வேண்டும். இத்தகைய செயல் தேர்தல் கமிஷன் மீதுள்ள நம்பிக்கையை சிதைக்கும் விதமாக இருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தலுக்காக புதிய கமிட்டி அமைக்கப் பட்டு வருகிறது, நாளை காலை முன்னாள் மாநில தலைவர்கள், சட்டமன்ற தலைவர்கள், அனைவருடனான ஆலோசனை கூட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது.
மக்களை மோடி ஏமாற்றி இருக்கிறார். தமிழ்நாட்டில் கதவு திறந்து உள்ளது கூட்டணிக்கு எல்லோரும் வாருங்கள் என்று அறிக்கை விடுத்துள்ளார். காங்கிரசுடன் அனைத்து கட்சிகளும் கூட்டணி சேர்வது அமித்ஷாவிற்கு பொறுத்துக்கொள்ளமுடியவில்லை என்பதால் கடைசி நேர புலம்பல் இது.
திமுக தலைவர் தெளிவாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்துவிட்டனர். அதிமுக அச்சுறுத்தலில் இருக்கிறது, தம்பிதுரை போன்றவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் தோல்வி அடைந்து விடுவோம் என்று பயம் கொள்கிறார்கள். காங்கிரஸ்-திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழ்க்க வேண்டும். ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் வழக்கில், அமர்வு நீதிபதியை கொண்டு நீதி விசாரணை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.