சாராய கடைகளை திறக்கச் சொல்லும் கார்த்தி சிதம்பரம்... கொந்தளித்த திமுக முகாம்
சென்னை: மதுவிலக்கு சாத்தியமற்ற ஒன்று என்றும் மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் எனவும் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கருப்புச்சின்னம் அணிந்து கூட்டணிக்கட்சிகளை இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், திமுக காங்கிரஸ் இணைந்து நடத்திய டாஸ்மாக் கடை எதிர்ப்பு போராட்டத்தில் கார்த்தி சிதம்பரம் பங்கேற்காமல் அதை புறக்கணிக்கவும் செய்தார்.
அந்த 2 நாள் தவறு.. தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைய "டாஸ்மாக்" காரணமா?.. இன்றிலிருந்து தெரிய வரும்!
மல்லுக்கட்டு
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் அண்மைக்காலமாக உரசல் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அந்த இரு கட்சிகளின் செயல்பாடுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி திமுக அண்மையில் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் தரப்பில் சொல்லிக்கொள்ளும் வகையில் ஆதரவு தரவில்லை என்ற தகவல் மு.க.ஸ்டாலினிடம் சென்றுள்ளது. ஒரு சில முக்கிய நிர்வாகிகளை தவிர மற்ற காங்கிரஸ் பிரமுகர்கள் யாரும் வீடுகளுக்கு வெளியே நின்று டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
கள்ளச்சாராயம்
இதனால் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்த சூழலில், கார்த்தி சிதம்பரத்தின் கருத்து அவரை கடுமையாக கோபம் கொள்ளச்செய்துள்ளது. உலகளவில் மதுவிலக்கு என்பது தோல்வியடைந்த ஒன்று என்றும், டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் மாஃபியா வரும் என அவர் தெரிவித்தது திமுக முகாமை சூடாக்கியுள்ளது. இந்த நேரத்தில் தான் அவர் இந்தக் கருத்தை கூற வேண்டுமா, திமுக நடத்திய போராட்டத்தை கார்த்தி கொச்சைப்படுத்துகிறாரா என அறிவாலயத்தில் இருந்து கேள்விக் கணைகள் பாய்ந்துள்ளன.
அழகிரி தவிப்பு
ஏற்கனவே காங்கிரஸை திமுக கூடுதல் சுமையாக கருதி வரும் நிலையில் கார்த்தி சிதம்பரம் எதற்கு இப்படி பேசுகிறார் என தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் வருத்தப்பட்டிருக்கிறார். இதனை கார்த்தி சிதம்பரத்திடம் நேரடியாக கேட்க முடியாமல் ப.சிதம்பரம் மீதுள்ள மதிப்பு காரணமாக அழகிரி தவித்து வருகிறார். திமுகவோடு சுமூக உறவை பேணுமாறு கடந்த 6 மாதத்திற்கு முன்பே அழகிரியை அழைத்து சோனியாகாந்தி கட் அண்ட் ரைட்டாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு புகழாரம்
ஊரடங்கு காலத்தில் தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை திறந்திருக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த கிளிப்பிங்ஸை சமூக வலைதளம் மூலம் பெண்களிடம் கொண்டு சென்று காங்கிரஸ் வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்க தமிழக பாஜக பக்காவாக பிளான் தயாரித்துவிட்டது. ஏற்கனவே மதுக்கடைகளை மூடக்கோரி பெண்கள் வீதியில் இறங்கி போராடி வரும் நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் கருத்தால் அது கட்சிக்கும் கூட்டணிக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.