சிவகங்கை லோக்சபா தொகுதியில் ப. சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் - ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
சிவகங்கை லோக்சபா தொகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் ப.சிதம்பரம் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சிவகங்கை லோக்சபா தொகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு போட்டியிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட மூவாயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அந்த வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி வழக்கு தொடர்ந்த ராஜகண்ணப்பனின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.
சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ப.சிதம்பரமும், அதிமுக சார்பில் ராஜ கண்ணப்பனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ கண்ணப்பனை விட 3 ஆயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று ப.சிதம்பரம் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து இந்த தேர்தலில் ப.சிதம்பரம் பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி ராஜ கண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2009 ஆம் ஆண்டு லோக்சபாத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என தீர்ப்பளித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.