திராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்!
சென்னை: திராவிடத்தில் அரசியல் பயணத்தை தொடங்கி இந்திய தேசியத்துக்கு போய் தமிழ்த் தேசிய அரசியலுக்கு திரும்பி மீண்டும் இந்திய தேசியத்தில் இணைந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். ஆனால் எந்த அரசியலிலும் சிவாஜியால் வெல்ல முடியாமல் போனதுதான் துயரமானது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் நினைவுநாள் இன்று .. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். என திராவிட இயக்கத்தின் தலைவர்களோடுதான் சிவாஜி கணேசனின் அரசியல் பயணம் தொடங்கியது. திமுகவில் சிவாஜி, எம்ஜிஆர் இடையேயான கவுரவ மோதல் உச்சகட்டத்தை எட்டியது.
இதனால் மனம் வெறுத்துப் போன சிவாஜிகணேசன் திருப்பதி சென்று திரும்பினார். அன்றோடு திராவிடர் இயக்கத்துக்கும் சிவாஜிகணேசனுக்குமான உறவு முடிவுக்கு வந்தது. பின்னர் காமராஜரை நேரில் சந்தித்து காங்கிரஸில் தம்மை ஒப்படைத்துக் கொண்டார் சிவாஜி.
காங்கிரஸ் மேடையில் சிவாஜி
காங்கிரஸ் மேடைகளில் எம்ஜிஆரை ஒரு கை பார்த்தார் சிவாஜி. எம்ஜிஆரும் சளைக்காமல் மோதினார். ஒருகட்டத்தில் எம்ஜிஆரும் திமுகவில் இருந்து தனி இயக்கம் கண்டார். சிவாஜிகணேசன் காமாராஜரோடுதான் பயணித்தார். காங்கிரஸ் கட்சி திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்த போதெல்லாம் அதை சகஜமாக ஏற்றுக் கொண்டார் சிவாஜி.
ராஜ்யசபா எம்.பி. பதவி
இந்திரா காந்தியால் ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டார் சிவாஜி. அரசியல் வாழ்வில் அவர் கண்ட ஒரே ஏற்றம் இதுமட்டுமே. இந்திரா மறைவுக்குப் பின்னர் காங்கிரஸில் மூப்பனாருடன் கோஷ்டி மோதலில் ஈடுபட்டார் சிவாஜி. அப்போது மூப்பனாருக்கு பக்கபலமாக இருந்தார் ராஜீவ்காந்தி.
தமிழக முன்னேற்ற முன்னணி
இதனால் காங்கிரஸை விட்டு வெளியேறி தமிழ்த் தேசிய அரசியலைப் பேசிய தமிழக முன்னேற்ற முன்னணியை உருவாக்கினார் சிவாஜி. ஆனால் சிவாஜிகணேசனாலேயே தேர்தலில் வெல்ல முடியாமல் தோற்றுப் போனது. அந்த கட்சிக்கும் முடிவுரை எழுதப்பட்டது.
ஜனதா தள்
தீவிர அரசியல் வேண்டாம் என முடிவு எடுத்த சிவாஜியை வி.பி.சிங் அரவணைத்துக் கொண்டார். வி.பி.சிங்கின் ஜனதா தளத்தில் இணைந்தார் சிவாஜி. ஆனால் ஜனதா தளத்துக்கு தமிழகம் ஆதரவு தரவில்லை. இத்துடன் சிவாஜிகணேசனின் அரசியல் பயணம் முடிவுக்கு வந்தது.
நடிப்புலக சக்கரவர்த்தியாக புகழின் உச்சியில் இருந்த சிவாஜிகணேசனின் அரசியல் பயணம் படுதோல்விகரமாக முடிவுக்கு வந்தது நிச்சயம் ஒரு அரசியல் துயரம்தான்.