துப்பிய சிவசேனா.. துடைத்துக் கொண்ட பாஜக.. இப்படியும் ஒரு கூட்டணி!
Recommended Video
சென்னை: பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் இது திருவிளையாடல் படத்தில் தருமி கதாப்பாத்திரத்தில் வரும் நடிகர் நாகேஷ் பேசும் வசனம். இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ மராட்டியத்தில் உள்ள சிவசேனா கட்சிக்கு அப்படியே பொருந்துகிறது.
சிவசேனாவும் பாஜகவும் கருத்தியல் ரீதியாகவும் கலர் ரீதியாகவும் ஒரே புள்ளியில் இணையும் கட்சிகள். 25 ஆண்டுகளுக்கு மேலாக இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில்தான் உள்ளன. இருந்தாலும் சிவசேனா பாஜகவை கழுவி ஊற்றாத நாளே இல்லை என்று கூறலாம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இரு கட்சிகளும் மராட்டியத்தில் பெருவெற்றியை பெற்றன. சிவசேனா 18 தொகுதிகளிலும் பாஜக 22 தொகுதிகளிலும் வென்றது. அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மராட்டியத்தில் சிவசேனாவை விட சிறிய கட்சியாக இருந்த பாஜக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருமாறியது.
சிவசேனாவின் செல்வாக்கு உள்ள தொகுதிகளையும் கைப்பற்றியது. அதோடு மத்திய அரசிலும் சிவசேனாவுக்கு உரிய அங்கீகாரமோ மரியாதையோ பாஜக வழங்கவில்லை. இப்படியாக இரு கட்சிகளுக்கும் ஆரம்பித்தது ஏழரை. அப்போதிருந்தே பாஜகவின் அனைத்து செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து வந்த சிவசேனா, பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் ஒரு பெண்ணை பாதுகாப்பு துறைக்கு அமைச்சராக்கிவிட்டோம் என்று கொண்டாடும் வேளையில் சிலவகையான சிந்தனைக்கு எதிரானவர்களை அடக்க கோழைத்தனமான அடக்கு முறை கையாளப்படுகிறது என்று பாஜகவை விமர்சித்தது
பாஜக வாபஸ்
ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்திக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றபோது காஷ்மீரில் அராஜகத்தை நிகழ்த்திவிட்டு ஆட்சியை விட்டு வெளியேறுவதாக பா.ஜனதா அறிவித்துள்ளது. காஷ்மீரில் இதற்கு முன்பு இவ்வளவு இரத்தமும் சிந்தியதும் இல்லை, ராணுவ வீரர்களும் உயிரிழந்ததும் இல்லை. பா.ஜ.க ஆட்சியில்தான் இவ்வளவு அழிவும் நிகழ்ந்துள்ளது. பா.ஜக.வின் பேராசை காரணமாகவே காஷ்மீரில் ஆட்சி அமைக்கப்பட்டது. பா.ஜ.க. வின் பேராசைக்காக தேசம், ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் பெரும் விலையை கொடுத்துள்ளார்கள். இதற்காக பா.ஜ.க வரலாறு மன்னிக்காது என்று மிகக் கடுமையாக விமர்சித்தது சிவசேனா
ஆட்சியை இழந்த பாஜக
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பாஜக ஆட்சியை இழந்தபோது பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புவதாக குறிப்பிட்டது சிவசேனா சிவசேனா கட்சியின் 52-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக ஏராளமான பொய்களைப் பேசியது. மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்து அவர்களை நம்ப வைத்து தேர்தலில் வெற்றி பெற்றது. பொய்களைப் பேசித்தான், மோடி தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடித்தது என்று உண்மையை போட்டு உடைத்தார்
தோல்வியடைய செய்வோம்
இந்த மாத துவக்கத்தில் இம்முறை நமது மாநிலத்தில் நாம் கடந்த முறை வென்ற 42 இடங்களை விட குறைந்தது ஒரு இடத்திலாவது கூடுதலாக வெல்வோம் என்றார் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ். இதற்கு பதிலளித்த சிவசேனா ஒருவேளை பாஜகவிடம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கைவசம் இருந்தால், 43 தொகுதிகளில் அல்ல 48 தொகுதிகளையும் வெல்ல முடியும் என்று பேசியது. அடுத்து அம்மாநிலத்தில் பேசிய பாஜக தலைவர் அமிட்ஷா கூட்டணி கட்சிகள் தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்டால், படுதோல்வியடைய செய்வோம் என்று எச்சரித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சிவசேனா மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவை அழித்து விடுவோம் என்று கூறியது .
மோடி அலை மங்கி விட்டது
இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல பேசிய சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் ‘‘நாடுமுழுவதும் வீசிய மோடி அலை தற்போது மங்கிவிட்டது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாட்டை வழிநடத்த தயாராகி விட்டார்'' எனக் கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் சிவசேனா கட்சி தனித்தே நிற்கும் என்று முழங்கினார்கள் உத்தவ் தாக்கரேவும் அந்த கட்சியினரும். ஆனால் இப்போதோ இருவரும் "நண்பேண்டா" என்று இணைந்து விட்டனர்.
துப்பினால் துடைத்து கொள்வோம்
ஆக்கப் பூர்வமான விசயங்களை முன் வைத்து புகழ் பெறுவோரும் உண்டு குற்றம் சொல்லியே புகழ் பெறுவோரும் உண்டு இதில் சிவசேனா இரண்டாவது வகை. இந்த இடத்தில் ஒன்று நினைவுக்கு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்திடம் சமூக வலைதளத்தில் பேட்டி கண்ட ஒருவர் கேட்கிறார் உங்களைப் பார்த்து ஒருவர் துப்பினால் ? என்று கேட்கிறார். அதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத் துடைத்து கொள்வோம் என்றார். இந்த கேள்வியும் பதிலும் ஏனோ இப்போது நினைவுக்கு வந்து செல்கிறது