சொகுசு அறை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கண்ணனிடம் உறவு கொள்வதாக ரீல் சுற்றிய சிவசங்கர் பாபா
சுசில் ஹரி சர்வதேசப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இடமான தனது சொகுசு அறையை சிபிசிஐடி காவல்துறையினரிடம் சிவசங்கர் பாபா அடையாளம் காட்டியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டே பள்ளியில் உள்ள சொகுசு அறையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் சிவசங்கர் பாபா. தன்னுடன் உறவு கொள்வது பகவான் கண்ணனிடம் உறவு கொள்வதற்கு சமம் என்று ரீல் சுற்றியே மாணவிகளை சொகுசு அறைக்கு அழைத்து சென்று தொந்தரவு செய்ததாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. சிபிசிஐடி காவல்துறையினருக்கு பள்ளியில் இருக்கும் சொகுசு அறையை சிவசங்கர் பாபா அடையாளம் காட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட நிலையில் சாமியார் சிவசங்கர் பாபாவும் தற்போது கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைபட்டுள்ளார்.
சுசில் ஹரி சர்வதேசப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இடமான, தனது சொகுசு அறையை சிபிசிஐடி காவல்துறையினரிடம் சிவசங்கர் பாபா அடையாளம் காட்டியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எண்களில் சிவசங்கர் பாபா மீது புகாரளிக்கலாம்.. தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.. போலீசார் உறுதி
பாலியல் தொல்லை
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பல்வேறு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினர். அந்த அடிப்படையில் சிவசங்கர் பாபா மற்றும் இரண்டு ஆசிரியைகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் தன்மையை அறிந்து வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
டெல்லியில் கைது
டேராடூனில் தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா கைதாகாமல் இருக்க மொட்டை அடித்துக்கொண்டு நேபாளத்திற்கு தப்ப முயன்றார். டெல்லி காசியாபாத்தில் வைத்து டெல்லி போலீசாரின் உதவியுடன் சிபிசிஐடி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பல மணிநேர விசாரணை
டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு சிவசங்கர் பாபாவை அழைத்து வந்தனர். அதன்பின் சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கேளம்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளிக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சிவசங்கர் பாபாவை அழைத்துச் சென்றுள்ளனர்.
சொகுசு அறையில் பாலியல் தொல்லை
பள்ளியில் இருந்த பிரம்மாண்ட சொகுசு அறையில்தான், மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அனைத்து மாணவிகளும் குறிப்பிட்டு தெரிவித்திருந்தனர். எனவே இந்த வழக்கில் குற்றம் நடந்த இடமான சொகுசு அறை முக்கியமாக பார்க்கப்படுகிறது.
நாடகம் ஆடிய பள்ளி ஊழியர்கள்
சிபிபிஐடி போலீசார் முதற்கட்டமாக பள்ளியில் அதிரடி சோதனை நடத்தியபோது பாபாவின் சொகுசு அறையை பள்ளி ஊழியர்கள் அடையாளம் காட்டவில்லை என கூறப்படுகிறது. பள்ளியின் வாசலில் வைக்கப்பட்டுள்ள மேப்பில் பாபா சொகுசு அறை எங்கு உளது எனவும் காட்டப்படவில்லை. பள்ளி ஊழியர்களை கேட்ட போது அருகில் வேறொரு அறையை காட்டி, இதுதான் சிவசங்கர் பாபாவின் அறையென நாடகம் ஆடியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
சொகுசு அறை அடையாளம்
மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவின் அறையும், பள்ளி ஊழியர்கள் காட்டிய அறையும் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது தெரியவந்தது. இந்த சந்தேகத்தை தீர்க்கவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் சிவசங்கர் பாபா வை பள்ளிக்கு அழைத்துச் சென்று அவரது சொகுசு அறையை போலீசார் வாகனத்தில் இருந்தபடியே அடையாளம் காட்டுமாறு தெரிவித்துள்ளனர்.
சிறையில் அடைக்க உத்தரவு
சிபிசிஐடி விசாரணை முடிந்த பிறகு கொரோனா மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி.
மறுத்த நீதிபதி
அப்போது தனக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளதாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் சிவசங்கர் பாபா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கான செலவை தானே பார்த்துக் கொள்வதாகவும் சிவசங்கர் பாபா கூறினார். அதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார். அரசு மருத்துவமனையிலாவது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என மீண்டும் சிவசங்கர் பாபா தரப்பில் வலியுறுத்தப்பட்டு அதற்கான மருத்துவ அறிக்கைகளையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேரடியாக விசாரிக்க திட்டம்
அடுத்த கட்டமாக இன்னும் மூன்று நாட்களில் சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவலில் எடுத்த பிறகு, சிவசங்கர் பாபாவை நேரடியாக அவரது சொகுசு அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்து, விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.