ஒரு தடவைக்கு 50 புடவை... சென்னையில் திருட்டு டெல்லியில் ஜவுளிக்கடை - பகீர் திருடர்கள்!
சென்னை தி நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை திருடி விற்கும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களின் திருட்டு பாணியே அலாதியானது. சிசிடிவி பற்றி கவலைப்படாமல் நேக்காக த
சென்னை: திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பார்கள். திருடர்களைப் பிடிக்க ஜவுளிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும் கண்காணிப்புகளை பலப்படுத்தினாலும் நூதனமான முறையில் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை திருடிக்கொண்டுபோய் அதை விற்று பணம் பார்த்துவிடுகின்றனர் டெல்லியில் இருந்து வந்துள்ள ஒரு கும்பல். ஒவ்வொரு தடவை சென்னை வந்து போகும் போதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட புடவைகளை திருடிக்கொண்டு போய் டெல்லியில் ஜவுளிக்கடை போட்டு கோடிகளில் சம்பாதித்துள்ளது இந்த திருட்டு கும்பல்
சென்னை தி. நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் இந்த கும்பல் பட்டுப்புடவைகளை திருடிய போது சிக்கிக்கொண்டது. பணக்காரத்தோற்றத்தில் காரில் வந்து லட்சக்கணக்கில் பட்டுபுடவைகளை ஆட்டையை போடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கின்றனர்.
அந்த கும்பல் போலீசில் சிக்கியும் அசரவில்லை. இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம் என்பதுபோல அசால்டாக வாக்குமூலம் கொடுத்து போலீசையே அதிரவைத்துள்ளனர். டெல்லிகும்பலின் அதிரடி கைவரிசையை ஒரு கடைக்காரர் கண்டுபிடித்து விடவே இப்போது கும்பலோடு அகப்பட்டுக்கொண்டனர். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல போலீசில் சிக்கிய அந்த கும்பல் இப்போது சிறையில் கம்பி எண்ணுகின்றனர்.
போலீஸ் ஆக நினைத்த சிறுவன்... கல்விக்கட்டணம் கட்டமுடியாத விரக்தியில் குடும்பத்தோடு தற்கொலை
புடவை திருடும் கும்பல்
டெல்லியில் இருந்து பணக்காரர்கள் போர்வையில் கார் மூலம் சென்னை வரும் மேல்மங்கல்புரியைச் சேர்ந்த பீனா, ஜோத்தி, சுனிதா, ராம்குமார், ரிங்குசிங், தீபம்சாலி ஆகியோரின் டார்கெட் பட்டுப்புடவை திருடுவதுதான். லட்சக்கணக்கான மதிப்பு கொண்ட பட்டுப்புடவைகளை ஆட்டையை போடுவதுதான் தொழில்.
தொழில் ரகசியம்
கடைகளில் பட்டுப்புடவை மட்டுமே திருடுவதை வாடிக்கையாக கொண்ட இந்த கும்பல் கடந்த 11ஆம் தேதி அந்த பிரபல கடைக்குள் நுழைந்தது. இத்தனைக்கும் அந்த கடையில் வளைத்து வளைத்து சிசிடிவி செட் செய்திருக்கிறார்கள். ஆனாலும் பல புடவைகளை பிரித்து பிரித்து பார்த்துவிட்டு எதுவுமே பிடிக்கவில்லை என்று உதட்டை பிதுக்கியவாறே இந்தியில் பேசிக்கொண்டனர். ஆனாலும் அவர்களுக்குள் சங்கேத பாஷையில் எடுத்தாச்சு கிளம்பலாமா என்று கூறிக்கொண்டனர்.
சந்தேகப்பட்ட கடைக்காரர்கள்
பெண்களின் நடவடிக்கை அந்த கடைக்காரர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணின் வயிறு உப்பலாக தெரிந்தது. கடைக்குள் வரும்போது நார்மலாக இருந்த அந்தப்பெண், அசாதாரணமாக தெரியவே, பெண் ஊழியர்களைக் கொண்டு அந்த பெண்களை அறைக்குள் சென்று சோதனை செய்தனர். சுடிதாருக்குள் வைத்து பட்டுப்புடவையை அமுக்கியிருந்தது தெரியவந்தது.
திருடுவதே தொழில்
இந்த கும்பலில் பீனா சற்று வயதானவர் அம்மா தோற்றத்தில் இருப்பார் அவர்களின் மகள், மருமகள் தோற்றத்தில் சில பெண்களும், மகன்கள் போல சில ஆண்களும் துணையாக சென்னைக்கு வந்து திருடிச்செல்கின்றனர். பல துணிக்கடைகளில் இவர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அந்த புடவைகளை டெல்லிக்குக் கொண்டுபோய் ஜவுளிக்கடை போட்டு விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர்.
விலை உயர்ந்த புடவைகள்
ஒவ்வொருமுறையும் விலை உயர்ந்த புடவைகளைத்தான் திருடுகின்றனர். சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 10 லட்சம் மதிப்புள்ள புடவைகளை திருடியுள்ளனர். ராயலாக ரிச் லுக்கில் கடைக்குள் நுழைந்து பட்டுசேலை செக்சனுக்குள் சென்று நேக்காக திருடுவார்களாம். சிசிடிவி இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லையாம் இந்த கும்பல். நான்கு பேர் கடைக்குள் போக காரேடு ஒருவர் தயாராக இருக்க புடவைகளை திருடிக்கொண்டு வந்த உடன் எஸ்கேப் ஆகி விடுவார்களாம்.
ஐம்பது புடவைகள்
ஒவ்வொருமுறையும் சென்னை வந்து செல்லும் போது ஐம்பதுக்கும் மேற்பட்ட புடவைகளுடன்தான் டெல்லிக்கு கிளம்புவார்களாம். இது எங்களுக்கு சம்மர் கேம்ப் சாமியோவ் என்பது போல வாக்குமூலம் கொடுத்திருக்கின்றனர் அந்த கும்பல். பிரபல ஜவுளிக்கடைகளில் பலத்த கண்காணிப்பையும் மீறி நேக்காக திருடும் வடமாநில கும்பல் சிக்கியுள்ளதால் திருடர்கள் அனைவரும் சிக்கி விட்டார்கள் என்று நினைத்து விட முடியாது. இந்த கும்பல் போல இன்னும் எத்தனை கும்பல்கள் இதையோ தொழிலாக வைத்து சென்னை, மதுரை, கோவையில் முகாமிட்டு இருக்கிறார்களே... ஜவுளி, நகைக்கடைக்காரர்கள் அதிகம் உஷாராகவே இருங்கள் என்று காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.