எதிர்ப்பை மீறி திமுக கூட்டணி ஏன்?.. 6 தொகுதியிலும் தனி சின்னத்தில் போட்டி - திருமா ஓபன் டாக்
சென்னை: சனாதன பேராபத்தில் இருந்து தமிழகத்தை பாதுகாக்க திமுகவுடன் கூட்டணியை தொடர்வதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்ப்புகளுக்கிடையே திமுக கூட்டணியை உறுதி செய்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். நேரடி கூட்டணி பேச்சுவார்த்தை இன்றி, திமுக ஒதுக்கிய 6 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டு இன்று கையெழுத்திட்டிருக்கிறார்.
இதற்காக, அண்ணா அறிவாலயம் வந்த திருமாவளவனை திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு வரவேற்றார். பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட திருமாவளவன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, "தமிழகத்தை சூழ்ந்திருக்கும் சனாதான பேராபத்தை எதிர்த்து தேர்தல் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம், புதுச்சேரியை குறிவைத்து பாஜக சதிவேலைகள் செய்கிறது. தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என பா.ஜ.க நினைக்கிறது. தமிழகத்தில் பாஜக, சங் பரிவார அமைப்புகளால் காலூன்ற முடியாது.
6 தொகுதிகளை ஒதுக்கிய திமுக கூட்டணியில் தொடர கட்சியினர் இடையே எதிர்ப்பு எழுந்தது. ஆனால், எதிர்கால அரசியல் கருதி திமுகவில் தொடருகிறோம். பாஜக தமிழகத்தில் காலூன்ற கூடாது என்ற காரணத்திற்காக, திமுக கூட்டணியை தொடருகிறோம்.
கெஜ்ரிவால் அடுத்த அதிரடி முடிவு; கெஜ்ரிவால்-கமல்ஹாசன் நட்பு கூட்டணி, கட்சி கூட்டணியாக மாறாதது ஏன்!
ஆறு தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவை என்னென்ன என்பது குறித்து பேசி முடிவு செய்வோம். 6 தொகுதிகளில் எத்தனை தனி, எத்தனை பொது என்பது பின்னர் முடிவு செய்யப்படும். எனினும், நாங்கள் போட்டியிடும் ஆறு சின்னத்திலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம். எந்த சின்னம் கிடைக்கிறதோ அதில் போட்டியிடுவோம்" என்றார்.