அடுத்தடுத்து சந்திக்கும் ஈழத் தலைவர்கள்...ஸ்டாலினுடன் ரவூப் ஹக்கீம் ஆலோசனை!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஈழத் தமிழர் தலைவர்கள் அடுத்தடுத்து அக்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராசாவைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
லோக்சபா தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு ஈழத் தமிழர் தலைவர்கள் வாழ்த்து செய்தியை அனுப்பி இருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு வருகை தந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராசா சில நாட்களுக்கு முன்னர் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரையும் மாவை சேனாதிராசா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. நேற்று பங்கேற்று உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் ரவூப் ஹக்கீம் சந்தித்து பேசினார்.
அப்போது லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்றதற்கு ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார் ஹக்கீம். பின்னர் ரவூப் ஹக்கீமுக்கு நினைவு பரிசை மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
Gratified to speak at the "Thamizhar Ezhuchchi Naal- Kalaignar Uthayam" event held in Chennai, 6/9. The Malaysian Speaker of the Parliament S A Vigneshwaran, Poet Laureate Vairauththu, Tamil Literati Solomon Paappayya and celebrity Actor Sathyaraj, were among those present.#DMK pic.twitter.com/cfRPiYI8XG
— Rauff Hakeem (@Rauff_Hakeem) June 10, 2019
இச்சந்திப்பின் போது ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வராக வந்து மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கு நல்ல பணிகளை செய்ய வேண்டும் என்று வாழ்த்தினார் ஹக்கீம். அத்துடன் "நீங்கள் விரைவில் இலங்கை வரவேண்டும் அங்குள்ள கிழக்கு மற்றும் வடக்கு மாகாண மக்களையும் மலையக மக்களையும் சந்தித்து உரையாட வேண்டும். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அழைப்பு கொடுக்கிறோம் என்றார் ஹக்கீம்.
இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் நாள் தாக்குதல் சம்பவங்களை குறித்து கேட்டார் அதற்கு பதில் அளித்த ரவூப் ஹக்கீம், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அரசியல் தொடர்பு இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டினர். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் ஆலோசனை
இதனிடையே இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியாவால் மட்டுமே முடியும் என மோடியிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் வலியுறுத்தினர். இதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, டெல்லிக்கு வருகை தந்து இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு குறித்து ஆலோசனை நடத்தலாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா மீண்டும் தலையிடுவதற்கான சாத்தியங்கள் தொடங்கியிருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சென்னையில் அடுத்தடுத்து ஈழத் தலைவர்கள், ஸ்டாலினை சந்தித்து இலங்கைக்கு வருகை தர அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.