பெருநகரங்களில்தான் "பிக்" பாஸ்.. குட்டி நகரங்கள்.. குக்கிராமங்களில் "புஸ்" ஆகிப் போச்சு!
சென்னை: பெருநகரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது சிறுநகரங்கள், குக்கிராமங்களில் கண்டுகொள்ளப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 3-ன் அறிமுக விழா விஜய் டிவியில் நேற்று இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 4 மணிநேரம் நடைபெற்றது. ஒவ்வொரு போட்டியாளர்களையும் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.
பெருநகரங்கள், சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாக இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்கு போகப் போவது யார்? என பெரும் விவாதம் நடத்திக் கொண்டிருந்தனர். தண்ணீர்பஞ்சம் தலைவிரித்தாடும் சென்னை பெருநகரத்திலும் இது தொடர்பான விவாதங்கள் அனல்பறந்தன.
ஆனால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியனாது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களைத் தாண்டி பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உச்சகட்ட கிரிக்கெட் போட்டிகளின் போது சிறுநகரங்களில் கூட நள்ளிரவில் வெடிவெடித்து கொண்டாடுகிற ரசிகர்கள் இருக்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக விழாவை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இது தொடர்பாக திண்டுக்கல் போன்ற நகர்ப்புற இளைஞர்களிடம் கேட்டால், அதை பார்த்து நாம் என்ன செய்யப் போகிறோம்.. அதில் எல்லாம் பெரிய ஈடுபாடு எதுவும் இல்லையே என ஸ்டைலாக கை விரிக்கின்றனர்.
இதேபோல் இளம்பெண்களும் கூட, நேரம் கிடைக்கனுமே.. வெட்டியாக ஒரு மணிநேரம் 2 மணிநேரம் அதுக்கு ஒதுக்கினால் இருக்கிற பிழைப்பை யார் பார்ப்பது என அங்கலாய்க்கின்றனர். இப்படி உள்ளூரில் விலைபோகாது என்பதால்தான் என்னவோ வெளிநாடு வாழ் தமிழர்களை களமிறக்கி ரேட்டிங்கை எகிற செய்ய முடிவு செய்திருக்கிறார்களோ என்னவோ?