பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பேரவையில இப்படியா செய்றது... சரத்குமார் வருத்தம்
சென்னை: தமிழக நிதிநிலை அறிக்கை வாசிக்கப்படும் போது பேரவையில் அனைவரும் பேசிக்கொண்டிருந்தது வருத்தம் அளிக்கிறது என சமக தலைவர் சரத்குமார் வேதனை தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான, கமல் ஹாசன் பட்ஜெட் குறித்து நேற்று வெளியிட்ட பதிவில், போன பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன ஆனாது என்று கேள்வி கேட்டு, பழைய பட்ஜெட்டை தூசி தட்டி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், பட்ஜெட் குறித்து கூறுகையில் "நிதிநிலை அறிக்கை வாசிக்கப்படும் போது பேரவையில் அனைவரும் பேசிக்கொண்டிருந்தது வருத்தம் அளிக்கிறது. வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான எந்த ஒரு திட்டமும் பட்ஜெட்டில் இல்லை; ஆழ்ந்து பார்த்தால் செலவுகள் அதிகம் ராமநாதபுரத்தில் அப்துல் கலாம் பெயரில் கல்லூரி அறிவிப்பு வரவேற்கத்தக்கது" என்றார்.
முன்னதாக, கடந்த 8ம் தேதி பட்ஜெட் வெளியான அன்று சரத்குமார் கூறுகையில், தமிழக அரசின் பட்ஜெட் சிறப்பானது என்றோ, வளர்ச்சி திட்டங்களை கொண்டிருக்கிறது என்றோ உறுதியாக கூற முடியாத நிலை உள்ளதாக தெரிவித்திருந்தார்.