ஆபாசமாக திட்டுகிறார்கள்.. அசிங்கமான படம் போடுகிறார்கள்.. பேராசிரியை சுந்தரவள்ளி குமுறல்.. புகார்
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சுந்தரவள்ளி புகார் அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: "என்னை பற்றி ஆபாசமான வார்த்தைகளாலும், அசிங்கமான படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார்கள். பாலியல் வழக்கில் கைது என்று போலி செய்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோல செய்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சமூக செயற்பட்டாளர் சுந்தரவள்ளி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
பேராசிரியர் சுந்திரவள்ளி தமுஎகச அமைப்பின் மாநிலத் துணை செயலாளராக இருப்பவர். நிறைய டிவி விவாதங்களில் பங்கேற்று தன் கருத்தை ஆழமாக எடுத்து வைப்பவர்.
இந்நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், "நான் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக தளத்தில் பெண் விடுதலை தொடர்பாகவும், சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் என்னைக் குறித்து மிக இழிவான சொற்களைக் கொண்டு ஆபாசப் படங்களுடன் எனது முகத்தை ஒட்டி வன்மப் பிரச்சாரத்தில் சிலர் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
நான் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டதாக பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரில் போலியான செய்தியை சிலர் பரப்பியுள்ளார்கள்.
எனது பொதுவாழ்க்கைக்கு அவமானத்தை ஏற்படுத்தக் கூடிய செயலாக இது உள்ளது. போலியான செய்தியை பரப்பியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுந்தரவள்ளி, "இது என் மீது வைத்துள்ள தாக்குதலாக நான் பார்க்கவில்லை.. பொதுவெளியில் கருத்தியல் ரீதியாக பெண்கள் செயல்படுகின்றனர் அவர்கள் மீது வைக்கப்படும் தாக்குதலாக பார்கிறேன். ஆபாசமான வார்த்தையை வெளியிட்டது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என தெரிய வந்தும் கட்சி மேலிடத்தில் தகவல் தெரிவித்தும் இதுவரை ஒரு கண்டன செய்திகள் கூட பதிவிடவில்லை. தவறு செய்தவர்கள் மீது மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவிக்க போகிறேன்" என்றார்.