கட்டாய இந்திக் கல்வியில் திருத்தம்- தமிழர்கள் காதில் பூ? கல்வியாளர்கள் கொந்தளிப்பு
சென்னை: மத்திய அரசின் கஸ்தூரி ரங்கன் வரைவுக் குழுவில் கட்டாய இந்திக் கல்வி என்பதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவது தமிழர்கள் காதில் பூ சுத்தும் வேலையா என கல்வியாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.
கல்வியாளரும் பேராசிரியருமான அ. மார்க்ஸ் எழுதியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் இது தொடர்பான பதிவு:
தென்னகத்தில் ஏற்பட்ட எதிர்ப்புகளின் விளைவாக இன்று மோடி அரசு முன்னதாக வெளியிட்ட கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்துள்ளது.
மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்கவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ள கஸ்தூரிரங்கன் குழு, இந்தி பேசாத மாநிலங்களைப் பொருத்தமட்டில் இந்த மூன்று மொழிகளில் ஒன்று "இந்தி" எனச் சொல்லி இருந்தது.
தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் இதை எதிர்த்தன அதை ஒட்டி இந்தி கட்டாயம் என்பதிலிருந்து பின்வாங்கியுள்ளது.
ஆனால் மும்மொழித் திட்டத்தில் மாற்றமில்லை எனக் கூறியுள்ளது கவனிக்கத் தக்கது. முந்தைய அறிவிப்பில் கற்றுக் கொள்ள வேண்டிய மூன்று மொழிகளில் "இந்தி அல்லது ஆங்கிலம்" கட்டாயம் என்பதில் இப்போது 'இந்தி' நீக்கப்பட்டுள்ளது.
ஆனால் மூன்று மொழிகள் கட்டாயம் என்பது தொடர்கிறது. அதில் ஒரு மொழியில் இலக்கியத் தரத்தில் திறன் இருக்க வேண்டும்.
இது தவிர ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், சீனம், ஜெர்மன், ஜப்பானிய மொழி என்பதுபோல ஒரு வெளிநாட்டு மொழியும் secondary level வரும்போது கற்றுக் கொள்ள வேண்டுமாம் (உருது அதில் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் "என்பது போல ஒரு வெளிநாட்டு மொழி" என்பதை முன்னிட்டு அதுவும் இருக்கும் என நம்பலாம்).
கட்டாய இந்தி திணிப்பு.. கொந்தளித்த தமிழகம்.. வழக்கம் போல ரஜினி கப்சிப்!
எப்படியும் ஆங்கிலம், தாய்மொழி தவிர மூன்றாம் மொழி கட்டாயம் எனவும் பிற நாட்டு மொழி ஒன்றைக் கற்க secondary level ல் வாய்ப்புள்ளது என்கிறபோது தென்னக மாணவர்கள் மூன்றாவது மொழியாக எதைத் தேர்வு செய்வார்கள்?
அது இந்தியாகத்தானே இருக்க முடியும்? ஆக இது மறைமுகமாக இந்தியைத் திணிப்பதுதானே?
நண்பர்கள், கல்வியாளர்கள் சிந்திக்கவும். மொழிகளை விரும்பிக் கற்பது வேறு. இப்படித் திணிப்பதை என்ன சொல்வது?
இவ்வாறு அ.மார்க்ஸ் போன்ற கல்வியாளர்கள் பதிவிட்டுள்ளனர்.