சாலமன் பாப்பையா, சுப்பு ஆறுமுகத்துக்கு இப்போதாவது வழங்கப்பட்ட பத்மஶ்ரீ விருது- ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தின் தலைசிறந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, வில்லுப் பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் ஆகியோருக்கு இப்போதாவது மத்திய அரசு பத்மஶ்ரீ விருதுகள் வழங்கியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
நாட்டின் பத்ம விருதுகள் மிக உயரிய விருதுகளாகப் போற்றப்படுகின்றன. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
பத்மவிருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் பலர் இருந்தும், பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் ஏதோ காரணங்களால் அத்தகைய தகுதியாளர்கள் இடம்பெறாமல் போவது உண்டு. சில நேரங்களில் பத்ம விருதுகளை முன்வைத்து சர்ச்சைகளும் ஏற்படுவதும் வழக்கம்.
இந்த ஆண்டு பத்ம விருதுகளைப் பார்க்கும் போது ஓரளவு நிறைவை தரக்கூடியதாகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை. திரை உலக ரசிகர்களை தன்வயப்படுத்தி வைத்திருந்த மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருதை அளித்து மத்திய அரசு சிறப்பித்திருக்கிறது.
எஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷன், சாலமன் பாப்பையா, பாம்பே ஜெயஶ்ரீ, சுப்பு ஆறுமுகத்துக்கு பத்மஶ்ரீ விருது
அதேபோல நீண்டகாலமாக பத்ம விருதுகளுக்காக எதிர்பார்க்கப்பட்டவர்கள் பேராசிரியர் சாலமன் பாப்பையாவும் வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகமும். இவர்களுக்கு எல்லாம் எப்போது பத்ம விருதுகள் கிடைத்து சிறப்பிக்கப்படுவார்களோ என்கிற ஏக்கம் அவர்களது ரசிகர்களுக்கு இருந்து வந்தது.
சுமித்ரா மகாஜன், பாஸ்வான், கேசுபாய் படேல், தருண் கோகாய்-க்கு பத்ம பூஷன் விருது
இப்போது சாலமன் பாப்பையா, சுப்பு ஆறுமுகம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம ஶ்ரீ விருதுகளை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இதன்மூலம் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இவர்களது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது மத்திய அரசு.