இப்பவே வந்த ஓகே.. கதவை அடைத்த சேலம் டீம்! இருதலைக் கொள்ளி எறும்பாய் ஓபிஎஸ் அணி மாஜிக்கள்! என்னாச்சு?
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி இருக்கும் நிலையில் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் தாவ பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி இருப்பதாக சேலம் தரப்பு நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் ஆனது நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்களையும் அடுத்த கட்ட நகர்வுகளையும் சந்தித்து வருகிறது. ஓபிஎஸ் இபிஎஸ் இடையேயான மோதலால் கட்சி பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக செயல்பட முடியவில்லை என அக்கட்சி தொண்டர்களை புலம்பி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது ராணுவ கட்டுப்பாட்டோடு இருந்த இயக்கம் அவரது மறைவுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக ஏதாவது ஒரு பிரச்சனையை சந்தித்து தான் வருகிறது.
அதிமுகவில் ஓபிஎஸ்..சேர்த்து கொள்ள தயார்! எடப்பாடி டீம் ’தலை’ க்ரீன் சிக்னல்! ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்?
அதிமுகவில் சிக்கல்
ஓபிஎஸ் -சசிகலா விவகாரம், டிடிவி தினகரன் பிரிந்தது, அணிகள் இணைந்தது, முதல்வர் வேட்பாளர் விவகாரம், எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் என தொடர்ந்து அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக கட்சியிலும் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். ஆனால் இது போன்ற நகர்வுகளை மேற்கொள்ளாத ஓபிஎஸ் தற்போது தனித்து விடப்பட்டிருக்கிறார். வெறும் பத்து சதவீத நிர்வாகிகள் ஆதரவு கூட அவருக்கு இல்லை.
ஓபிஎஸ் அணி
குறிப்பாக ஐந்து மாவட்ட செயலாளர்கள் ஆதரவு மட்டுமே அவருக்கு இருக்கிறது. பெரும்பாலான மா.செ.க்கள் எடப்பாடி தரப்பிலேயே தஞ்சம் புகுந்த நிலையில் வெல்லமண்டி நடராஜன், தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன், ராமநாதபுரம் தர்மர், கோவை செல்வராஜ், புகழேந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டுமே ஓபிஎஸ் தரப்பில் இருக்கின்றனர் ,தங்கள் தரப்புக்கு வருவார்கள் என எதிர்பார்த்து நிலையில் உசிலம்பட்டி ஐயப்பன் தவிர வேறு யாரும் ஓபிஎஸ் அணிக்கு வரவில்லை. அதே நேரத்தில் சென்னையைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் அண்ணன் ஆஃபா பாண்டியராஜன் ஆகியோர் எடப்பாடி தரப்புக்கு தாவினர்.
சிக்னல்கள் சாதகம்
இடையில் தேவர் ஜெயந்தி விழாவின் போது ஓபிஎஸ் சாதகமான சில அம்சங்கள் நடைபெற்றன. ஜெயலலிதா தங்க கவசம் வழங்கியது போல ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கவசம் வழங்கினார். இதனால் தென் மாவட்டங்களில் அவருக்கு ஓரளவு செல்வாக்கு அதிகரித்தது. இந்நிலையில் தற்போது நீதிமன்ற தீர்ப்பு வர இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான சில அம்சங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்புக்கும் சில சிக்னல்கள் சாதகமாக இருக்கிறது. ஆனாலும் கட்சியைப் பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தான் என தற்போதைக்கு முடிவாகி இருக்கிறது.
அணி தாவ முடிவு
ஓபிஎஸ் அதிமுகவில் இணைக்கப்பட்டாலும் இணைச் செயலாளர், துணைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் தான் நியமிக்கப்படுவார். அல்லது அவை தலைவராக நியமிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக மீண்டும் கட்சியில் இணைந்து இரண்டாம் மூன்றாம் அணியாக இருப்பதைவிட எடப்பாடி தரப்பில் தற்போதைய இணைந்து தங்கள் அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ள சில ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் தற்போது ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் மாவட்ட செயலாளர்களின் இருவர் சேலம் தரப்பை தீவிரமாக தொடர்பு கொண்டு கட்சியில் சேர முடிவெடுத்துள்ளனர். அவர்களை வரவேற்க எடப்பாடி தரப்பும் தயாராக இருக்கிறது.
யார் பக்கம்?
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தங்கள் அணியில் இணைந்தால் நன்றாக இருக்காது. அதற்கு முன்னதாகவே வந்தால் வரவேற்க தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளனராம். ஓபிஎஸ் தரப்பில் இருந்தால் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் எம்பி சீட் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருக்கிறதாம். இதனால் ஓபிஎஸ் தரப்பிலேயே இருக்கலாமா அல்லது எடப்பாடி தரப்புக்கு தாவி விடலாமா என இரு தலைக்கொல்லி எறும்பாக தவிக்கின்றனர் என்கின்றனர் தேனி வட்டாரத்தினர். எப்படி எனினும் இன்னும் இரு வாரத்தில் வழக்கு தொடர்பான தீர்ப்பு வந்துவிடும் அப்போது தெரியும் யார் யார் பக்கம் இருப்பார்கள் என்பது.