யாராவது கேட்டை திறந்து பேட்டி கொடுப்பார்கள்.. உடனே அது முக்கிய செய்தியா? ரஜினியை தாக்கிய ஸ்டாலின்!
Recommended Video
சென்னை: யாராவது கேட்டை திறந்து பேட்டி கொடுப்பார்கள், உடனே அதற்கு முக்கிய செய்தி போல முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்தை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக சிஏஏவை ஆதரித்துள்ளார். சிஏஏ மூலம் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டியில், ரஜினி குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் பாதிப்பு ஏற்படும் என மக்கள் மத்தியில் தேவையற்ற பீதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அரசியல்வாதிகள் தங்களது சுய லாபத்துக்காக தூண்டிவிடுகின்றனர். அவர்களை மக்கள் நம்ப கூடாது. மாணவர்கள் ஒரு போராட்டத்தில் இறங்குவதற்கு முன்பு யோசித்து முடிவெடுத்து இறங்க வேண்டும். என்று குறிப்பிட்டார்.
இந்த பேட்டியின் போது ரஜினி, தனது வீட்டிற்கு வாசலிலேயே வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தது சர்ச்சையானது. ரஜினி செய்தியாளர்கள் யாரையும் வீட்டின் கேட்டிற்கு உள்ளே அனுமதிப்பது இல்லை. வெளியே வைத்து பேட்டி கொடுத்துவிட்டு அனுப்பி விடுகிறார்.
உள்ளே எப்போதும் அவர் செய்தியாளர்களை அனுப்பியது இல்லை. அவர் பிரபலமாக இருக்கலாம், அதற்காக இப்படி நடந்து கொள்ள கூடாது என்று பலர் விமர்சனம் வைத்து இருந்தனர். இந்த நிலையில் ரஜினியின் இந்த செயல் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
அதில், டிஎன்பிஎஸ்சி தேர்வில் பெரிய முறைகேடு நடந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. விவகாரத்தில் ஜெயக்குமார் சரண் அடைந்து இருக்கிறார். நான் சொன்னதை தவறாக கருத வேண்டாம். நான் சொன்னது புரோக்கர் ஜெயக்குமார். வேறு ஜெயக்குமார் இல்லை. நான் சொன்னதை வைத்து அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்று சிலர் கூறி வருகிறார்கள்.
தமிழக அரசியலில் ரஜினி கேம் சேஞ்சராக இருப்பார்... பாஜக சீனிவாசன் ஆருடம்
இப்போதெல்லாம் உண்மையான செய்திகள் மறைக்கப்படுகிறது. யாராவது கேட்டை திறந்து கொண்டு செய்தியாளர்களை வாசலில் நிற்கவைத்து பேட்டி அளித்தால் அது செய்தியாகி விடுகிறது.
அப்படிப்பட்ட பேட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதுவே தலைப்புச் செய்தியாக வருகிறது, உண்மை மறைக்கப்படுகிறது என்று ஸ்டாலின் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.