3 பைக்கில் வந்த 6 மர்ம நபர்கள்.. குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. போலீஸ் விசாரணை
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையான நிலையில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையான நிலையில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்யப்பட்டுள்ளது.
துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினி பெரியார் குறித்து பேசினார். அதில், பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார்.
இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை பற்றி யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார்.இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது, என்று ரஜினி குறிப்பிட்டார்.
பெரியாரின் போராட்டம் குறித்து ரஜினி சொன்ன கருத்துக்கு திராவிட விடுதலை கழகம், பெரியார் திராவிட கழகம் உட்பட அமைப்புகள் ரஜினி மீது போலீசில் புகார் அளித்துள்ளது. இதையடுத்து தற்போது சென்னை போலீஸ் சார்பாக ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டிற்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திமுகவின் வெற்றிக்கு நான் காரணமல்ல.. டாடியும்.. மோடியும்தான் காரணம்.. உதயநிதி கலக்கல் பேச்சு!
இந்த பாதுகாப்பிற்கு இடையில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்யப்பட்டுள்ளது.6 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர். இன்று காலை 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆனால் அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசை பார்த்ததும் 6 பேரும் பைக்கில் வேகமாக தப்பி சென்றனர். அவர்கள் கையில் இருந்த பெட்ரோல் குண்டுகளை வீசவில்லை. இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.