நடிகர் சங்க கட்டிட பணிகளை தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள்... நடிகர் விஷால் பேட்டி
சென்னை: அரசியலுக்கு அப்பாற்றபட்டு நடிகர் சங்கம் உள்ளது. அரசியல் சாயத்தை பூச வேண்டாம் என நடிகர் விஷால் கேட்டு கொண்டுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்தச் சங்கத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில், தலைவர் பதவிக்கு நாசரும், பொது செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
துணை தலைவர்கள் பதவிக்கு பூச்சிமுருகன், கருணாஸ் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தளபதி தினேஷ், குட்டி பத்மினி, கோவை சரளா மனோபாலா, பிரசன்னா, குஷ்பூ, நிதின் சத்யா, சரவணன் ஆதி உள்ளிட்ட 26 பேர் போட்டி போடுகின்றனர்.
ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக மசாஜ் சேவை... ரூ. 100 முதல் கட்டணம்
அதே நேரம், நாசர் அணியை எதிர்த்து நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் தலைமையிலான அணி களமிறங்குகிறது. இந்த அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர்கள் பதவிக்கு நடிகை குட்டி பத்மினி மற்றும் நடிகர் உதயா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர் பதவிக்கு, நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், ஆர்த்தி, காயத்ரி ரகுராம், நடிகர்கள் ரமேஷ் கண்ணா, பரத், ஸ்ரீகாந்த், விமல் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில், நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார் நடிகர் விஷால். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு, பாண்டவர் அணி சார்பில் மனோபாலா மற்றும் குஷ்பு மனுத்தாக்கல் செய்தனர்.
பின்னர் நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கட்டிட பணிகளை தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அதை நாங்கள் நடக்க விடமாட்டோம். என்னுடைய நேர்மையைக் காப்பாற்றுவதற்காகத் தேர்தலில் நிற்கிறேன். நடிகர் சங்க புதிய கட்டிடம் 6 மாதங்களில் திறக்கப்படும் . நாடக நடிகர்களுக்கு உதவித்தொகை அதிகரிக்கப்படும். பதவி காலத்தில் நடிகர் சங்கத்துக்கு தேவையான பல திட்டங்களை செய்துள்ளோம் என்றார்.
அரசியலுக்கு அப்பாற்றபட்டு நடிகர் சங்கம் உள்ளது. அரசியல் சாயத்தை பூச வேண்டாம். கடந்த முறை கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது என கூறினார். தேர்தலை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. சட்டப்படி தேர்தல் நடந்தே தீரும். நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்றபட்டது. இங்கு, இருப்பவர்கள் யாரும் கட்சி சார்ந்து இல்லை. நடிகர் சங்கம் கட்டிட திறப்பு விழா மற்றும் மரியாதை நிமித்தமாக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்திக்க உள்ளோம் என்றார்.