தங்கம் விலை உயர்வும்.. அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மையும்!
சென்னை: தங்கம் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளதால் மட்டுமே இவ்வளவு உச்சத்தை அடையவில்லை. டாலருக்கு நிகரான நமது ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததன் காரணமாகவும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளார்கள். திருமண வயதில் பெண் வைத்துள்ளவர்களுக்கு, இந்த உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை திடீரென 40 ஆயிரத்தை கடந்ததற்கு லாக்டவுன் தான் காரணம் என்று நாம் நினைத்து கொண்டிருப்போம். அத்துடன் பொருளாதார முடக்கம் காரணமாக தங்கம் விலை ஏறுவதாக நினைத்துக்கொண்டிருப்போம். இவை எல்லாமே உண்மை தான். இதை எல்லாவற்றையும் தாண்டி ஒரு உண்மை உள்ளது. அதுதான் நமது இந்திய ரூபாயின் மதிப்பு. நமது ரூபாயின் மதிப்பு கடந்த 10 வருடத்தில் அப்படி பாதியாக சரிந்து போய் இருப்பதே தங்கம் விலை இந்த அளவிற்கு உயர காரணம்.
நாளை மறுநாள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... அரசியல் நிலவரம் பற்றி ஆலோசனை..?
45 ரூபாய் மதிப்பு
தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக இப்போது தான் மிக உச்சபட்சமாக ஒரு அவுன்சுக்கு 1941 டாலர் உயர்ந்திருப்பதாக நினைக்க வேண்டாம். கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1900 டாலரை தாண்டி உள்ளது. அந்த நேரத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 ரூபாய் ஆக இருந்தது. இதனால் தங்கம் விலை 2011ம் ஆண்டு 22 கேரட் தங்கத்தின் விலை 20000 ரூபாய் ஆக இருந்தது.
டாலர் மதிப்பு எவ்வளவு
அதாவது கடந்த 2011ம் ஆண்டு ஒரு அவுன்ஸ் தங்கத்தின் அன்றை மதிப்பு இந்திய ரூபாயில் 85500 ஆக இருந்தது. ஆனால் இன்றைக்கு அதன் மதிப்பு 1,42,044 ஆக அதிகரித்துள்ளது. அதாவது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடுமையாக சரிந்துள்ளது. ஒரு டாலரின் மதிப்பு 45 ரூபாயில இருந்து 74.80 ரூபாய் ஆக சரிந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதாவது அன்றைக்கு நீங்கள் 20 ஆயிரம் ரூபாயில் வாங்கிய தங்கம் இன்றைக்கு 40 ஆயிரத்திற்கு உயர இது முக்கிய காரணம் ஆகும்.
சுங்க வரி அதிகம்
தங்கம் விலை அதிகமாக இருக்க இன்னொரு காரணம், இறக்குமதியை தடுக்க அரசு விதித்த வரியாகும். ஆண்டுக்கு இந்தியாவில் 800 முதல 850 மில்லியன் கிலோ தங்கம் பயன்படுத்தப்படுகிறது. தங்கத்திற்கு இறக்குமதி வரை 10 சதவீதம் உள்ளது. இதுதவிர ஜிஎஸ்டி வரி 3 சதவீதம் உள்ளது. தங்கத்தை இறக்குமதி செய்தால் ஒட்டுமொத்தமாக 13 சதவீதம் வரியாக செலுத்த வேண்டும். இதன்படி தோராயமாக ஒரு அவுன்ஸ் தங்கத்தை இப்போது ரூ.142000 கொடுத்து இறக்குமதி செய்தால் அதற்கு சுமார் 17 ஆயிரம் வரை வரி செலுத்த வேண்டியது வரும். இதுவும் உயர்வுக்கு காரணம்.
10 ஆயிரம் உயர்வு
இதனிடையே கொரோனாவால் ஏற்பட்ட முடக்கம் காரணமாக தங்கத்தின் விலை அதிகமாகி வருவதும் உண்மை தான். கடந்த ஜனவரி மாதம் தங்கம் விலை 35 ஆயிரம் ஆக இருந்தது. இப்போது ஜூலையில் 40 ஆயிரத்தை கடந்துள்ளது. அதாவது 7 மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிட்டால் 18 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக இப்படி உயருகிறது. மக்கள் ஏதேனும் சூழலில் முடங்கினால் தங்கத்தில் தான் முதலீடு செய்வார்கள். அந்த வகையில் இப்போது மக்களிடம் உள்ள பாதுகாப்பான முதலீடு தங்கம் மட்டும்தான்.
குறைவான சம்பளம்
இன்னொரு விஷயத்தை சொல்ல வேண்டும். தங்கத்தோடு மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பை சுருக்கிவிட முடியாது. 2011ல் உங்கள் சம்பளம் அன்றைக்கு 20 ஆயிரமாக இருந்தால் இன்றைக்கு 40 ஆயிரம் வாங்கியிருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அதே மதிப்பாவது இருக்கும். இல்லாவிட்டால் அதைவிட நீங்கள் குறைவான மதிப்பில் தான் சம்பளம் வாங்குவதாக அர்த்தம். ஏனெனில் தங்கத்தை போல் ஒவ்வொரு பொருளின் மதிப்பு 2011ம் ஆண்டை ஒப்பிடும் போது பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆனால் அதற்கு தகுந்த ஊதியம் மாறிவிட்டதா என்றால் இல்லை என்பதே எதார்த்தமான உண்மை