பயணிகள் வருகை குறைவு.. ஜூன் 30 வரை சில தென்மாவட்ட ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரயில்கள்? முழு விவரம்!
சென்னை: தென் மாவட்டங்களில் இயக்கப்பட்டு வந்த சில ரயில்களை ஜூன் 30-ம் தேதி வரை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் வரத்து குறைவாக உள்ளதால் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே கொரோனா தொற்றின் தாக்கம் ஏற்பட தொடங்கியது. கொரோனா முதல் அலை ஓய்ந்தாலும் இந்த ஆண்டின் மார்ச்சுக்கு பிறகு கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் இருந்து வருகிறது.
கொரோனா காரணமாக நாட்டில் ரயில், விமான சேவைகள் சுமார் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளன.
ரயில் சேவை பாதிப்பு
இந்தியாவில் கொரோன தொற்று விஸ்வரூபமெடுத்த தொடக்க காலத்தில் இருந்தே ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதுவரை ரயில் சேவை இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. கொரோனாவை தடுப்பதற்காக பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு போட்டுள்ளன. ஒரு சில மாநிலத்தில் இன்னும் பொது போக்குவரத்தே தொடங்கவில்லை.
சிறப்பு ரயில் ரத்து
இதனால் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும் அதில் பயணிகளின் கூட்டம் குறைவாக இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஊரடங்கு தளர்வுகள் கொடுக்கபட்ட போதிலும் பஸ் போக்குவரத்து இயங்கவில்லை. இதனால் கடந்த மாதம் முதலே பல்வேறு சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
மதுரை-புனலூர்
இந்த நிலையில் கீழ்க்கண்ட ரயில்கள் வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- நாகர்கோவிலில் இருந்து இரவு 7.35 மணிக்கு கோவைக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் , மதுரையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புனலூர் புறப்படும் மதுரை-புனலூர் சிறப்பு ரெயில், மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில்,
தாம்பரம்-நாகர்கோவில்
சென்னை-கொல்லம் சிறப்பு ரெயில், மதுரை-சென்னை சென்டிரல் ஏ.சி. சிறப்பு ரெயில், இதேபோல் தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் மதுரை-சென்னை மஹால் எக்ஸ்பிரஸ் , சென்னை-நாகர்கோவில், தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.