நீ என்னய்யா பேசுற.. ஒன்னுமே புரியலையே.. ஆனந்த கண்ணீர் வீட்ட தனலட்சுமி.. பூரிப்பில் டேவிட் நீல்சன்!
பெற்ற மகனை 41 வருடம் கழித்து தாய் சந்தித்துள்ளார்
Recommended Video
சென்னை: கட்டிப்பிடித்து முத்தம்.. கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.. "நீ என்னய்யா பேசுற.. எனக்கு எதுவுமே புரியல" என்று 41 வருடம் கழித்து பெற்ற மகனை ஆரத்தழுவி கேட்கிறார் தாய்!
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த தம்பதி கலியமூர்த்தி-தனலட்சுமி. இவர்களுக்கு 1976-ம் வருடம் 2-வது மகனாக பிறந்தவர் டேவிட் நீல்சன்.
இவர் பிறந்த சமயம் குடும்பத்தில் சொல்ல முடியாத அளவுக்கு வறுமை.. பிள்ளைகளுக்கு சாப்பாடு கூட போட முடியாத அவலம்.. அதனால் டேவிட்டையும், பெரிய மகன் ராஜனையும் பல்லாவரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தனலட்சுமி சேர்த்துவிட்டார்.
டென்மார்க் தம்பதி
ஆனல், சில நாட்கள் கழித்து அந்த காப்பகத்திற்கு வந்த டென்மார்க் தம்பதிகள் இரு குழந்தைகளையும் தங்கள் தத்தெடுத்து கொண்டு போய் அவர்கள் நாட்டுக்கு போய்விட்டனர். குழந்தைகளை பறிகொடுத்த தனலட்சுமி, சில நாட்களில் திரும்பவும் மனசு மாறி காப்பகத்துக்கு ஓடினார்.. ஆனால், டென்மார்க் தம்பதி யாரோ வந்து குழந்தையை தூக்கிசென்றுவிட்டதாக சொல்லவும், கதறி அழுதார்.. அடிக்கடி இதை நினைத்து கண்கலங்குவார்..
போட்டோ
ஆனால், டேவிட்டின் குழந்தை போட்டோவை மட்டும்தான் தனலட்சுமியிடம் இருந்தது.. இதேபோல, காப்பகத்தில் தரப்பட்ட ஒரு போட்டோ டேவிட்டிடமும் இருந்தது. கைக்குழந்தை டேவிட்டுடன் தனலட்சுமி இருக்கும் போட்டோ அது! வருடங்கள் ஓடின!
சமூக ஆர்வலர்கள்
இந்நிலையில், கடந்த 2013-ம் வருடம் தன் அம்மாவை தேடி சென்னை வந்தார். அந்த காப்பகம் மூடப்பட்டிருந்தது.. அதனால் தன் அம்மாவை எப்படி தேடி கண்டுபிடிப்பது என தெரியாமல் சொந்த நாட்டுக்கே போய்விட்டார். ஆனாலும் அம்மாவை பார்க்க வேண்டும் என்ற ஆசை டேவிட்டுக்கு இருந்து கொண்டே இருந்தது. அதனால், சமூக ஆர்வலர்கள் அஞ்சலி பவார், அருண் தோலே போன்றோரை சந்தித்து, தன் நிலைமையை விளக்கி, கையிலிருந்த பிளாக் & ஒயிட் போட்டோ, காப்பக முகவரியையும் தந்தார்.
தனலட்சுமி
டேவிட்டுக்காக சமூக ஆர்வலர்கள் அந்த தாயை தேட ஆரம்பித்தார்கள். அப்போது சென்னை மாநகராட்சி ஆவணங்கள் மூலம் தனலட்சுமிக்கு டேவிட் பிறந்த தகவலை சேகரித்தனர். டேவிட்டின் குழந்தை படத்தை ஒரு குறும்படமாக போட்டு சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர். நண்பர்கள் உதவியுடன் தனலட்சுமியை தேட தொடங்கினர். தனலட்சுமி தனது கடைசி மகன் சரவணனுடன் மணலியில் ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வருவது தெரிந்தது.
கட்டிப்பிடித்து முத்தம்
இந்த தகவல் டென்மார்க்கில் வசிக்கும் டேவிட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. அண்ணன் ராஜன் சில தினங்களில் இந்தியா வருவதாக சொல்லவும், அம்மா கிடைத்த சந்தோஷத்தில், சென்னைக்கு முதலில் பறந்து வந்தார் டேவிட்.. அந்த ஓட்டு வீட்டுக்குள் டேவிட் நுழைந்ததுமே கண்களில் கண்ணீர் கொட்டியது.. 2 வயதில் பார்த்த குழந்தை டேவிட்டுக்கு இப்போது 43 வயது.. மகனை கட்டிப்பிடித்து கதறி அழுதார் தனலட்சுமி.. முத்த மழை பொழிந்தார்.
பாஷை
என்னென்னவோ பேசினார்.. தவித்த தவிப்பையெல்லாம் தனலட்சுமி சொன்னார்.. ஆனால் டேவிட்டுக்குதான் எதுவுமே புரியவில்லை.. டேவிட் பேசும் டேனிஷ் மொழி தனலட்சுமிக்கு புரியவில்லை.. "என்னய்ய பேசுறே.. அம்மாவுக்கு ஒன்னும் புரியலயே" என்று தனலட்சுமி சொன்னார்.. ஒருவரையொருவர் ஆரத்தழுவி, முத்தங்களை பொழியும் பாசத்துக்கு, மொழி ஒரு பிரச்சனையா என்ன?! வெளிப்படுத்துக்கும் அன்புக்கு மொழி என்று ஒன்று தேவையா என்ன?!