கேஸ் சிலிண்டர் பிரச்சினைக்கு குட்பை.. விலையும் சீக்கிரம் குறையுமாம்.! மத்திய அமைச்சர் முக்கிய தகவல்
சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தமிழகம் வந்துள்ள ராமேஷ்வர் டெலி, எரிவாயு விநியோகம் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. இங்கு மாநிலத்தில் பெரும்பாலான வீடுகளில் கேஸ் இணைப்பு ஏற்கனவே உள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைக் கடுமையாகப் பாதிக்கிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்துகின்றனர்.
சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாள்.. மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!
ராமேஸ்வர் டெலி
இந்தச் சூழலில் தமிழகம் வந்துள்ள மத்திய இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி, சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராமேஸ்வர் டெலி, மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் கொண்ட மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.
கச்சா எண்ணெய்
மேலும்,அரிய நோயாகக் கருதப்படும் ஹீமோபிலியா என்ற நோய்க்கான மருந்தையும் இலவசமாக வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் பெரும்பாலும் அதாவது 85% வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் நிலைமை மாறும்.
குறையும்
நாட்டிற்குத் தேவையான அனைத்து பெட்ரோலிய பொருட்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் குறையும் இதனால் விலை குறையவும் வாய்ப்புகள் உள்ளன" என்று அவர் தெரிவித்தார். முன்னதாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமேஷ்வர் டெலி, எரிவாயு கனெக்ஷன் தொடர்பாகவும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
குழாய் மூலம் சப்ளை
அங்கு அவர் கூறுகையில், "குழாய் மூலம் எரிவாயு இணைப்பை வழங்கும் திட்டத்திற்கு முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தான் இந்தத் திட்டத்தைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போதுள்ள மாநில அரசு இதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், சீக்கிரம் இதற்கான பணிகள் தொடங்கும். கெயில் நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
விலை குறையும்
முதலில் சென்னை, கோவை, மதுரை எனப் பெரிய நகரங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு நேரடியாக கேஸ் விநியோகிக்கும் திட்டத்தை தொடங்குவோம். அதன் பின்னர் இந்தத் திட்டத்தை படிப்படியாக விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்.. முழுமையாக அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு சப்ளை செய்ய வேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கம். இதில் செலவுகள் குறைவதால் எரிவாயு விலை குறையவும் வாய்ப்புகள் உள்ளது. இப்போது சென்னை எண்ணூர்-தூத்துக்குடி துறைமுகம் இடையே ரூ.6,000 கோடி மதிப்பில் எரிவாயு குழாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
தமிழ்நாடு
அதேபோல தமிழகத்தில் புதிதாக பெட்ரோல் பங்குகள் தொடங்க அனுமதி அளிக்க இருக்கிறோம். பெட்ரோல் பங்கு ஆரம்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எரிவாயு சப்ளை வசதியை அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெட்ரோல் பயன்பாடு காரணமாக ஏற்படும் காற்று மாசை தடுக்கவே 20% எத்தனால் கலந்து பெட்ரோல் விற்பனை செய்ய உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்,