மகளை கடத்திவிட்டதாக... நீதிமன்றத்தில் எம்எல்ஏ பிரபு... மீது பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு!!
சென்னை: கள்ளக்குறிச்சி அதிமுக சட்டசபை உறுப்பினர் பிரபு தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாகவும் அவரை மீட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பிரபு. அ.தி.மு.கவைச் சேர்ந்தவர். இவர் சௌந்தர்யா என்ற கல்லூரி மாணவி இன்று திடீரென திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தியாக துருகத்தைச் சேர்ந்த பெண்ணின் தந்தை சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில் தனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ இரண்டாமாண்டு படித்து வருவதாகவும், தன்னுடைய மகளை கள்ளக்குறிச்சி சட்டசபை உறுப்பினர் பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.
சாதியாவது ஒன்னாவது.. கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் சூப்பர் காதல்.. ஹேப்பி கல்யாணம்.. மக்கள் மகிழ்ச்சி!
இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தான் மிரட்டப்படுவதாகவும், எனவே தனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையே எம்எல்ஏ பிரபு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், '' எங்களது திருமணம் குறித்து வதந்திகள் வருகின்றன. நான் சவுந்தர்யாவை கடத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வதந்திகள் பரவுகின்றன. நாங்கள் 4 மாதங்களாக காதலித்து வந்தோம். முறைப்படி பெண் கேட்டு சவுந்தர்யாவின் வீட்டுக்கு சென்றோம். அவர்கள் பெண் தர மறுத்ததால், என்னுடைய பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம்'' என்று தெரிவித்துள்ளார்.