அடுத்த லெவலுக்கு போகும் அன்பில் மகேஷ்.. மா.செ பதவி வழங்க திட்டம்.. கலகலப்புக்கு மாறும் திருச்சி
அன்பில் மகேஷூக்கு புதிய பதவி தரப்படும் என்று தெரிகிறது
சென்னை: "காலமும் கடமையும்! நம் நட்பும் நாமும்!🖤♥️" என்ற வாசகத்துடன் கூடிய பெயர்பலகை ஒன்றை அன்பில் மகேஷ், நண்பர் உதயநிதிக்கு அன்று அளித்திருந்தார்... அதன் அர்த்தம் எவ்வளவு சக்தியும், பலமும் வாய்ந்தது என்பது நிரூபணமாகி வருகிறது.. விரைவில் அன்பில் மகேஷூக்கு முக்கிய பதவி ஒன்று தரப்போவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.
அன்பில் மகேஷ் குடும்பம் தமிழகம் அறிந்த ஒன்றுதான். மறைந்த கருணாநிதியின் முக்கியமான நண்பர்களில் ஒருவர் அன்பில் தர்மலிங்கம்.. இவரது மகன் அன்பில் பொய்யாமொழி ஸ்டாலினுக்கு மிக நெருங்கிய நண்பர். அவரது மகனான அன்பில் மகேஷ் உதயநிதியின் நண்பர். ஆக மொத்தம் இது வாழையடி வாழையாக நட்பில் தொடரும் குடும்ப உறவு ஆகும்.
குறிப்பாக உதயநிதி இளைஞரணி செயலராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்தே பக்க பலமாக இருந்து வருவது அன்பில் மகேஷ்தான். உதயநிதிக்கு ஆல் இன் ஆல் எல்லாமே மகேஷ்தான்... உதயநிதிக்கு அந்த பொறுப்பை பெற்று தந்ததில் மகேஷின் பங்கு அளப்பரியது என்பதை அனைவரும் அறிவர்!
நிர்வாகிகள்
அதனால்தான், காலியாக உள்ள இளைஞரணி நிர்வாகிகள் பதவிகளை நிரப்புவதற்காக, புதிய நிர்வாகிகள் தேர்வு, ஆக்டிவ்வாக இல்லாத நிர்வாகிகளை களையெடுப்பது உள்ளிட்ட பொறுப்புகூட மகேஷிடம்தான் அன்று தரப்பட்டது. அதனை துடிப்போடு செய்து வருகிறார் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மகேஷ் என்று இளைஞர் அணி தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. (அதே சமயம் மகேஷூக்கு தரப்படும் அதிமுக்கியத்துவம் கட்சியின் மூத்த தலைகள் சிலருக்கு எரிச்சலையும், அதிருப்தியையும் தருகிறது என்ற முணுமுணுப்பும் இருக்கத்தான் செய்கிறது)
உள்ளாட்சி தேர்தல்
அதன்படி, மற்றொரு முக்கிய பொறுப்பும் மகேஷுக்கு தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதற்கு காரணமும் உள்ளது.. கடந்த உள்ளாட்சி தேர்தலில் கிட்டத்தட்ட நெருங்கி வந்தாலும், அதிமுகவை மிஞ்சி வெற்றியை எட்டமுடியவில்லை.. திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரே, அதிமுகவுடன் நட்பு பாராட்டி வருவதால்தான் இந்த சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைமைக்கு தகவல்கள் போயுள்ளன.
தலைமை
அதனால் யாரெல்லாம் அதிமுகவினரோடு தொடர்பில் இருக்கிறார்களோ, அந்த நிர்வாகிகளை களையெடுக்க வேண்டும் என்று தலைமையும் முடிவு செய்துள்ளதாம்.. இந்த பொறுப்பைதான் மகேஷுக்கு தர பேச்சு அடிபடுகிறது.. ஆனால் முக்கிய நிர்வாகிகளும் இதில் இருப்பதால், மகேஷால் இதை தனித்து செய்ய முடியுமா என தெரியவில்லை.. அதனால் கட்சியின் மூத்த தலைவர் கேஎன் நேருவுடன் இணைந்து இந்த காரியத்தை செய்ய பேச்சு நடந்து வருகிறதாம்..
மாவட்ட செயலாளர்?
இப்போதைக்கு திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் மகேஷூக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கவும் இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மகேஷ் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டால் கட்சியின் சீனியரான கே.என்.நேருவுக்கு மிக முக்கிய பொறுப்பு தரப்படும் என்றும் தெரிகிறது.
கேஎன் நேரு
அநேகமாக தலைமை துணைப் பொதுச் செயலாளர் பதவி அல்லது தலைமை நிலைய முதன்மை செயலாளர் பதவி போன்ற வலுவான பதவிகளில் ஒன்று தரப்படும் என்று தெரிகிறது. அதேபோல, மாவட்ட செயலாளராக மகேஷ் நியமனம் செய்யப்பட்டால் திருச்சி இளைஞர்களின் நரம்பில் புது ரத்தம் பாய்ச்சுவதுபோல இருக்கும் என்று உறுதியிட்டு சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.. !