பாஜக பிளான்.. ரஜினிக்கு ஆப்பு.. தினகரனுக்கு டெல்லி.. வருகிறார் சசிகலா.. கை கோர்க்கும் அமமுக, அதிமுக
விரைவில் சசிகலா விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Recommended Video
சென்னை: அமமுக மட்டுமில்லை.. அதிமுகவும் சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் விரைவில் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது!
இன்னும் ஒரு சில மாதங்கள்தான்.. நன்னடத்தை விதியின் கீழ் சசிகலா விடுதலை ஆக உள்ளார். அதனால் அமமுகவில் மட்டுமல்லாமல், அதிமுகவிலேயே ஒரு புத்துணர்வு தென்பட ஆரம்பித்துள்ளது.
சசிகலா சிறை செல்லும்முன்பு, "அமமுக என்ற ஒரு கட்சியே கிடையாது. அதிமுகவை எந்த சக்தியாலும் என்னிடம் இருந்து பிரிக்க முடியாது. நான் எங்கு இருந்தாலும், அதிமுக மீதான சிந்தனை எப்போதுமே எனக்கு இருக்கும்" என்றுதான் சொல்லிவிட்டு போனார்.
இடைத்தேர்தல் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆழம் பார்க்கிறதா அதிமுக?
அமைதி
இதற்கு நடுவில் அமமுகவில் நடந்த எந்த செயல்பாடும், காரியங்களையும் சசிகலா ரசிக்கவில்லை, மாறாக அதிருப்தியைதான் வெளிப்படுத்தியதாக சொல்லப்பட்டது. இப்போது, அனைவரையும் அமைதி காக்க சசிகலா ஒரு கோரிக்கை விடுத்துள்ளாராம். இந்த ஒத்த வார்த்தையினால், பல கேள்விகளுக்கு விடை தெரியும் என நம்பப்படுகிறது. அதனால் சிறையிலிருந்து வெளி வந்ததும் அதிரடி முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தனது குடும்பத்தினரை சந்தித்து வருகிறாராம்.
தினகரன்
எப்படியோ, சசிகலா கட்டுப்பாட்டில் அமமுக வந்துவிடும் என்றே தெரிகிறது. அதேபோல, அதிமுகவுடன் கட்சியை இணைக்கவும் திட்டம் உள்ளதாம். இதற்கு அதிமுக தரப்பிலிருந்து சாதகமான சமிக்ஞைகள் வந்து விட்டதாக தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. அதாவது எடப்பாடி மற்றும் சசிகலா கட்டுப்பாட்டில்தான் கட்சி வந்துவிடும் என்கிறார்கள்.
இடைத்தேர்தல்
அதனால்தான், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்லில் அமமுக வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என சசிகலா தினகரனிடம் கூறியதாகவும் அதன்படியே தினகரன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், அமமுகவை அதிமுகவுடன் இணைப்பதை தினகரன் மனசார விரும்பவில்லை என்கிறார்கள். இந்த விஷயத்தில் சசிகலாவை எதிர்த்து தினகரனாலும் எதுவுமே செய்ய முடியாத நிலைமை.
டெல்லி அரசியல்
லோக்கல் அரசியலில் இருந்தால்தானே இந்த பிரச்சனை? பேசாமல், தினகரனை தேசிய அரசியலுக்கு அனுப்பிவிட்டால் என்ன என்றும் சசிகலா யோசிக்கிறாராம். அப்படி அனுப்பிவிட்டால், அதிமுகவுக்கும், தினகரனுக்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விடும் என்றும், தேவையில்லாத சர்ச்சைகள், விவாதங்கள் எழாது என்பதுதான் சசிகலா திட்டமாக உள்ளதாம்.
இணைப்பு
அது மட்டுமில்லை, வரும் ஜனவரியில் அதிமுக-அமமுக ரெண்டு கட்சி இணைப்பு நடந்தாலும் நடக்கலாம் என்கிறார்கள். ஏனெனில் வரும் 2021 தேர்தலை சந்திக்க பாஜக ஒருபக்கம் தயாராவதை போலவே அதிமுகவையும் தயார் செய்ய வேண்டி உள்ளது. சிறையில் இருக்கும் சசிகலாவை வெளியே கொண்டு வர சுப்பிரமணியசாமி ஒரு பக்கம் தீவிரமாக இருக்கிறார். அதிமுகவுக்கு மிகப்பெரிய ஆளுமையை சசிகலாவால்தான் தர முடியும் என்றும் சசிகலா கட்டுப்பாட்டில் கட்சி வந்துவிட்டால், பாஜக எளிதாக தமிழகத்தில் கடையை விரிக்கலாம் என்றும் கணக்கு போடப்படுகிறது.
பாஜக கணக்கு
இது பாஜகவின் கணக்காக உள்ளது என்றாலும் சசிகலாவின் நிலைப்பாடு உறுதியாக தெரியவில்லை. ஏனென்றால், வரும் தேர்தலில் ரஜினியையும் சமாளிக்க வேண்டிய நிலைமை சசிகலாவுக்கு இருக்கிறது. ஆக மொத்தம்.. தினகரனுக்கு டெல்லி, பாஜகவுடன் கூட்டணி, அமமுகவை இணைப்பது, அதிமுகவுக்கு தலைமை, என மெகா மெகா திட்டங்களை சசிகலா கையில் எடுக்க உள்ளதாக செய்திகள் வலுவாக வட்டமடிக்கின்றன!