கலகலக்க போகிறதா தேமுதிக.. நிர்வாகிகள் கடும் அதிருப்தி.. அள்ள காத்திருக்கும் திமுக!
தேமுதிக நிர்வாகிகள் கடுமையான அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: தேமுதிக என்ற கட்சி தடமே இல்லாமல் அழிந்து போய்விடும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் சாட்சாத் பிரேமலதாவும், சுதீஷூம்தான் என்பதை அக்கட்சியின் நிர்வாகிகளே ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.
எவ்வளவோ துன்ப,துயரங்களுக்கு நடுவே பல லட்சம் ரசிகர்களை சம்பாதித்தவர் விஜயகாந்த். கட்சி ஆரம்பித்தும், இந்த ரசிகர்களை அப்படியே வளைத்து தன் கைக்குள் வைத்து கொண்டார்.
கடுமையாக உழைத்து கட்சியிலும் முன்னோக்கி வந்தபோதிலும் கைவிடாத மக்கள், பிரேமலதாவும், சுதீஷூம் உள்ளே வரவும்தான் மெல்ல மெல்ல கைவிட ஆரம்பித்தனர்.
காசு இல்லை
தேர்தலில் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாத அளவுக்கு தேமுதிகவில் பலம் இல்லை, தேர்தல் செலவுக்கு பணமும் இல்லை. எங்க கிட்ட காசு இல்லையே, எப்படி தொகுதியில் செலவு செய்வது என்று தேமுதிக வேட்பாளர்கள் பகிரங்கமாகவே புலம்பினார்கள். அவர்களின் புலம்பல்களை கூட கட்சி தலைமை கேட்கவில்லை.
ஏலத்தில் காலேஜ்
இதையடுத்துதான் விஜயகாந்த் வீடு, காலேஜ் ஏலத்துக்கு வருவதாக செய்திகள் வந்தன. இதற்கு பிரேமலதா நிறைய விளக்கம் கொடுத்தாலும் யாராலுமே முழுசாக அதை ஏற்க முடியவில்லை. வங்கியில் வாங்கியதோ 5 கோடி ரூபாய் கடன், இதற்காக போய் 100 கோடி ரூபாய் சொத்துக்கள் எப்படி ஏலம் வரும் என்பதுதான் இப்போது வரை புரியவே இல்லை.
பிரேமலதா
ஏலம் விஷயத்திலும் இதே நிர்வாகிகளின் தலையில் கை வைக்க முயன்றார். மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை அவசரமாக பிரேமலதா கூட்டவும், ஏதோ கட்சி தோல்வி, கட்சி பலப்படுத்துதல் பற்றிதான் பேச போகிறார் என்று நினைக்கப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகிகளிடமே நிதி கேட்டார் என்ற தகவலும் வெளிவந்தது.
தேமுதிக
இதையெல்லாம் பார்த்து நொந்து போன நிர்வாகிகள்தான், "கூட்டணி விஷயத்தில் இருந்து எல்லாவற்றிலுமே சொதப்பலும் தோல்வியுமாக இருக்கிறது. விஜயகாந்த்தை நம்பி வந்தோம். அவருக்கு உடம்பு சரியில்லை. இனி எங்களால் எந்த அளவுக்கு தேமுதிகவில் இருக்க முடியும் என்று தெரியவில்லை" என்று புலம்ப தொடங்கி உள்ளனர். பலர், மாற்று கட்சியில் இணையவும் தயாராகி வருகின்றனர்.
குறி வைத்துள்ளன
இன்றும்கூட விஜயகாந்த் மீது பிடிப்புள்ளவர்கள், அவரை நேசிப்பவர்கள், பாசம் வைப்பவர்கள், தேமுதிகவின் அடி மட்ட தொண்டர்கள் கிராமப்புறங்களில் நிறையவே இருக்க செய்கிறார்கள். இவர்களை தவிர சில மாவட்டங்களில் முக்கிய நிர்வாகிகள் உள்ளனர். இந்த நிர்வாகிகளைதான் திமுக, அதிமுக குறி வைத்துள்ளது.
தனித்து போட்டி
கூட்டணியிலேயே இருப்பதால், அதிமுக தேமுதிக நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்குமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால், கூட்டணி வைத்து போட்டி என்பதைவிட தனித்து போட்டியிடலாமே என்றுதான் நிர்வாகிகள் கோயம்பேடு ஆபீசில் கூட்டணி அறிவிப்பு அன்று நடத்திய கூட்டத்தில்கூட கருத்து சொன்னார்கள். இவர்களின் பேச்சை யாருமே கேட்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகளை திமுக தன் பக்கம் இழுக்கவே நிறைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
விஜயகாந்த் என்ற ஒத்த மனுஷனின் முகத்துக்காக பொறுத்து போன நிர்வாகிகளை இன்று அள்ள போவது திமுகவா அல்லது வேறு ஏதேனும் பெரிய கட்சியா.. பொறுத்திருந்து பார்ப்போம்!