"180".. திமுக அதிரடி முடிவு.. மிச்சம் இருப்பது "54".. அதில் யார் யாருக்கு எத்தனை.. பரபர பேச்சுக்கள்!
திமுக 180 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: வரும் தேர்தலில் 180 தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதாக ஒரு பரபரப்பு செய்தி கசிந்து வருகிறது.. அப்படியானால், மீதியுள்ள 54 தொகுதிகளைதான் தன்னுடைய கூட்டணி கட்சிக்கு ஒதுக்க போகிறதா? அதை கூட்டணிகளும் ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது.
Recommended Video
ஐபேக் டீம் இங்கு வந்ததில் இருந்தே ஒரே ஒரு முடிவில் உறுதியாக இருப்பதாகவும், அந்த வகையில் இந்த முறை பெரும்பாலான இடங்களில் திமுகவே போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பே, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டால் திமுக வெற்றி பெறும் என்ற பட்டியலையும் ஐபேக் தயார் செய்து, திமுக உட்பட கூட்டணி கட்சிகளின் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்கிற லிஸ்ட்டையும் தயார் செய்து மேலிடத்துக்கு தந்துள்ளது.
கூட்டணி கட்சிகள்
அதில், காங்கிரஸ்-27, மதிமுக 6, கம்யூனிஸ்ட்கள் தலா 6 மொத்தம்-12, விசிக 6, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி-3, இந்தியன் யூனியன் முஸ்லிக் லீக்-3, இந்திய ஜனநாயக கட்சி-3, மனித நேய மக்கள் கட்சி-3 என கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 63 தொகுதிகளை ஒதுக்கியிருந்தது. திமுக நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் -171 என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மறைமுக பேச்சுவார்த்தை
இந்த லிஸ்ட் சம்பந்தமாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகி கொண்டே இருந்த நிலையில்தான், திமுக கூட்டணியில் நிறைய சலசலப்புகள் ஆரம்பமாகின.. கமலுடன் 3வது அணி அமைக்க திமுகவின் கூட்டணி கட்சிகள் சிலவும் மறைமுக பேச்சு வார்த்தைகள் நடத்தவும் துவங்கின.
பிரச்சனைகள்
ஆனால், இப்போது வேறு ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. திமுக இந்த முறை 180 தொகுதிகளில் நேரடியாகவே மோத உள்ளதாம்.. அப்படியானால் மீதமிருக்க கூடிய 54 தொகுதிகள் மட்டுமே கூட்டணி கட்சிக்கு ஒதுக்கும் என்று தெரிகிறது.. இந்த செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதனை கூட்டணி கட்சிகள் எப்படி எதிர்கொள்ளும், ஒருவேளை சீட் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புக் கொண்டாலும், தொகுதி பிரச்சனைகளை அவை எவ்வாறு எதிர்கொள்ளும் என்ற கேள்வி எழுகிறது.
பல்முனை போட்டி
சென்ற முறையாவது வெறும் 4 முனை போட்டி இருந்தது.. ஆனால், இந்த முறை திமுக, அதிமுக, ரஜினி (கட்சி ஆரம்பித்தால்), மநீம, நாம் தமிழர், என ஏகப்பட்ட முனைகளில் இருந்து போட்டி உருவாகியுள்ளது.. 4 முனை போட்டிக்கே ஆட்சியை இழந்தது திமுக.. அதுவும் ஒரே ஒரு சதவீத வித்தியாசத்தில் தவறவிட்டுவிட்டது.. இப்போது பல்முனை போட்டி என்பதால், இந்த முறையும் ஆட்சியை நழுவ விட்டுவிடக்கூடாது என்பதில் படுஜாக்கிரதையாக காய்களை நகர்த்தி வருகிறது.
காங்கிரஸ்
அந்த வகையில், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அநியாயத்துக்கு வலுவிழந்து காணப்படுகிறது.. அதுவும் பீகார் தேர்தலுக்கு பிறகு, அக்கட்சியின் மீதான பலவீனம் கூடிக் கொண்டே இருக்கிறது.. இதை திமுகவும் கருத்தில் கொண்டுதான் வருகிறது.. அதுமட்டுமல்ல, கடந்த தேர்தலில் திமுக தன் வாய்ப்பை நழுவ விட்டதற்கு காரணமே 41 சீட்டை லட்டு போல தூக்கி தந்ததுதான்.. அதில், 8 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.
வெறும் 24?
அப்போது மட்டுமல்ல, கடந்த எம்பி தேர்தலிலும் 10 சீட் தந்தும் இப்படித்தான் பெரிதாக காங். சோபிக்கவில்லை. அதனால், மிக குறைவான சீட்டுக்களையே காங்கிரசுக்கு ஒதுக்க திமுக யோசித்து வந்தது.. சென்ற முறை போல 41 சீட் என்றில்லாமல், 24 இடங்களை மட்டுமே அக்கட்சிக்கு ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாம். ஆனால், எவ்வளவு குறைவாக கொடுத்தாலும் அதை மறுக்காமலும், வேறு வழி இல்லாமலும், காங்கிரஸ் ஏற்கும் மனநிலையில்தான் உள்ளதாக தெரிகிறது.
விசிக
அதேபோல, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 முதல் 7 இடங்களையும் ஒதுக்க திமுக திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்கள்.. இதில், மதிமுக, விசிகவுக்கு 2 பிரச்சனைகள் இருக்கின்றன.. ஒன்று, சின்னம் சம்பந்தமான பிரச்சனை, மற்றொன்று தங்கள் கட்சியின் சுயத்தை இழந்துவிடக்கூடாதே என்ற தார்மீக பிரச்சனை... இதைதவிர, தங்கள் கட்சி சம்பந்தப்பட்டவர்கள் திமுக சின்னத்தில் எம்பிக்களாக உள்ளதால், உள்ளேயும் இருக்க முடியாமல், வெளியேவும் வர முடியாமல், கொடுப்பதையும் வாங்கி கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகுவார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
வாழ்வுரிமை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களையும், மனிதநேய மக்கள் கட்சி , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 2 இடங்களையும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு இடத்தையும் ஒதுக்கீடு செய்யவும் திமுக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதிலும் இன்னொரு சிக்கல் உருவாகும் என தெரிகிறது.. ஏனெனில், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைக்க திமுக யோசித்து வருகிறதாம்... ஆக, வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை எல்லாம் வைத்து பார்த்தால், ஆட்சியை பிடிக்காமல் திமுக ஓயாது போல தெரிகிறது!