திமுகவுக்குள் "டெக்னிக்கல்" சண்டையா.. ஐடி விங்குக்கும் "அவருக்கும்" பூசலாமே.. குழப்பத்தில் தலைமை!
திமுகவின் ஆலோசகர் பிகேவுடன் ஐடி விங் அதிருப்தி என்று கூறப்படுகிறது
சென்னை: திமுகவுக்குள் ஒரு கோல்ட்-வார் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.. அதாவது திமுகவின் ஐடி விங்-கிற்கும் பிரசாந்த் கிஷோருக்கும் ஏதோ அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.. இதனால் தலைமையே கொஞ்சம் அப்செட்டில் உள்ளதாம்!
எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற தீவிரத்தில் திமுக உள்ளது.. இதற்காகவே வியூக புலியான பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்து அழைத்து வந்துள்ளது.. பிகே டீமும் தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம் என களமிறங்கி உள்ளது.
அதன்படி, தற்போது கட்சியில் உள்ள மைனஸ்கள் என்னென்ன என்பதை கண்டறிந்து, களைய முயற்சி நடக்கிறது.. மற்றொரு புது புது ஐடியாக்களை உருவாக்கி அதனை மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு வருகிறது.
நிர்வாகிகள்
இதை தவிர சாதீய ரீதியான வாக்குகளை குறி வைத்து.. அந்தந்த மண்டல வாரியான வேலையும் நடக்கிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக திமுக நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் ஒரு சில அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்துக்களுக்கு ஆதரவான கட்சி என்று வெளிப்படுத்தும் எண்ணம் பிகேவின் திட்டமாக உள்ளதுதான்.. மற்றொரு காரணம் யாராக இருந்தாலும் களையெடுப்பு என்பதை கையில் எடுக்க வேண்டும் என்று பிகே வலியுறுத்தவும் மூத்த தலைகளுக்கு டென்ஷன் ஏறியுள்ளதாம்.
சீனியர்கள்
அது மட்டுமல்ல.. கூட்டணி வேண்டாம், தனித்தே போட்டியிடலாம் என்று பிகே ஆலோசித்ததும் சீனியர்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. ஆக மொத்தம் பிகே-வை நியமனம் செய்ததில் இருந்தே ஏகப்பட்ட கசமுசாக்களும், அதிருப்திகளும் எழுந்தவாரியாகவே உள்ளது. இந்த சமயத்தில் இன்னொரு பிரச்சனை கிளம்பி உள்ளது.. அது திமுகவின் ஐடி விங் பற்றினதுதான்.
பிகே டீம்
திமுகவின் ஐடி விங் என்பது கட்சிக்கு பக்க பலமாக இருக்க கூடியது.. கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகள், சிறப்புகளை மூலை முடுக்கெல்லாம் மக்களிடம் கொண்டு சென்று கொண்டிருப்பது.. இந்த ஐடி விங்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைய பேர் செயல்பட்டு வருகிறார்கள்.. இந்த ஐடி விங்கிடம் பிகே டீம் அவர்களின் ஒட்டுமொத்த டேட்டாவையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.
பட்டதாரிகள்
இதுதான் அவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணி உள்ளது.. "நாங்க வேணாம், ஆனா நாங்க ரெடி பண்ணியிருக்கிற டேட்டா மட்டும் உங்களுக்கு வேணுமா" என்று அவர்கள் தங்களின் டேட்டாக்களை தர மறுத்துள்ளனர்.. அது மட்டுமில்லை.. பிஎச்டி, பிஜி முடித்தவர்களை கேம்பஸ் நேர்முக தேர்வில் வரவழைத்து அதில் இருந்து சிலரை தேர்வு செய்ய போகிறாராம்.. இதற்கான இன்டர்வியூ வரும் ஜுன், அல்லது ஜூலையில் நடக்க போகிறதாம்.. ஏற்கனவே சிலரை தேர்வு செய்தும் வைத்துள்ளாராம் பிகே.
மிசா விவகாரம்
இதையெல்லாம் பார்த்துதான் ஐடி-விங் பிரச்சனையை தலைமைக்கே கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும் பிகேவை மீறி ஏதாவது நடக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள். இதற்கும் ஒரு காரணம் சொல்கிறார்கள்.. சில மாதங்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் ஸ்டாலினின் மிசா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.. முரசொலி நிலம் விவகாரமும் பூதாகரமாக்கப்பட்டது.. மீடியாவில் இது சம்பந்தமாக பல எதிர்மறை கருத்துக்கள் திமுகவை டேமேஜ் செய்த மாதிரி வலம் வந்தன.. இந்த மாதிரியான சர்ச்சை சமயங்களில் ஐடி விங் சரியாக விவகாரங்களை கையாளவில்லை என்றும் ஒரு பேச்சு உள்ளது.
திணற வைக்க திட்டம்
இதற்கெல்லாம் ஐடி விங் அதிகாரப்பூர்வமான பதிலடி தந்து எதிர்தரப்பை ஆஃப் செய்யவில்லை என்கிறார்கள்.. வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர்களில் திமுகவுக்கு எதிரான செய்தி வந்தால், அதற்கு நெத்தியடி பதிலை சொல்லி அவர்களை திணற வைப்பதுதான் ஐடி விங்-கின் பிரதான கடமை... அந்த வகையில் உடனுக்குடன் பதிலடி தந்து திமுக மீதான நெகட்டிவ் தோற்றத்தை உடைக்க பிகே முயல்வார் என்றும், அதனால்தான் ஐடி-விங்கையும் கையில் எடுக்க போகிறார் என்றும் சொல்கிறது அறிவாலய வட்டாரங்கள்!