வெயிட் பதவி ஆன் தி வே.. பொன் ராதாகிருஷ்ணனை சும்மா விட மனசில்லாத பாஜக!
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு புதிய பதவி தர பாஜக யோசித்து வருகிறதாம்
Recommended Video
சென்னை: சும்மா சொல்லக் கூடாது.. கன்னியாகுமரி தொகுதிக்காக பொன் ராதாகிருஷ்ணன் நிறையவே செய்துள்ளார். ஆனாலும் நேரமோ என்னவோ அவர் தோற்றுப் போய் விட்டார். ஆனாலும் அவரை சும்மா விட்டு விட பாஜகவுக்கு மனசே இல்லையாம்.
கன்னியாகுமரி தொகுதியில் அசைக்க முடியாத செல்வாக்குடன் வலம் வந்தவர்தான் பொன் ராதாகிருஷ்ணன். ஆனால் ஒக்கி புயல்தான் அவரது அரசியல் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விட்டது. அதில் மட்டும் அவர் கூடுதல் சுதாரிப்புடன் இருந்திருந்தால் இன்று இவர் மீண்டும் மத்திய அமைச்சராக வலம் வந்திருக்க கூடும்.
பொன் ராதாகிருஷ்ணனுக்கு அந்த அளவுக்கு குமரியில் செல்வாக்கு உண்டு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடிக்கு சவால் விட்டு ஜெயலலிதா அதிர வைத்து ஜெயித்தார். 37 இடங்களை அதிமுக அள்ளியது, தனி ஆளாக. ஆனால் அந்த அலையிலும் தப்பிப் பிழைத்தவர்கள் இருவர்தான். அவர்களில் ஒருவர் அன்புமணி, அவரது வெற்றிக்கான காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
குமரி மக்கள்
ஆனால் ஜெயலலிதா அலையிலும் சிக்கி பொன் ராதாகிருஷ்ணன் தப்பிக்க மோடி அலை மட்டும் காரணம் இல்லை, மாறாக பொன் ராதாகிருஷ்ணன் மீது குமரி மக்கள் வைத்த பாசமும் தான் முக்கியக் காரணம். இதனால்தான் பொன் ராதாகிருஷ்ணன் மட்டும் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரும் ஆனார்.
எதிர்ப்பு அலை
2019 அவருக்கு கசப்பான ஆண்டாக மாறி விட்டது. தமிழகம் முழுவதும் வீசிய மோடி எதிர்ப்பு , பாஜக எதிர்ப்பு அலை முக்கியக் காரணம் என்றால், ஒக்கி புயலின்போது பாஜக மத்திய அரசு செயல்பட்ட விதம், தமிழ க அரசு செயல்பட்ட விதம் மக்களிடையே கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தி விட்டது. அதில்தான் பொன் ராதாகிருஷ்ணனும் சிக்கிக் கொண்டார்.
நடக்கவில்லை
பொன் ராதாகிருஷ்ணன் மட்டும் ஜெயித்திருந்தால் இந்நேரம் மத்திய அமைச்சராகியிருப்பார். மீண்டும் கெத்தாக வலம் வந்திருப்பார். ஆனால் நடக்காமல் போய் விட்டது. இருப்பினும் பொன் ராதாகிருஷ்ணனை அப்படியே விட்டு விட பாஜக மேலிடத்திற்கு மனசு இல்லையாம். அவருக்கு ஏதாவது சிறப்பு செய்ய பாஜக விரும்புகிறதாம்.
புதிய பதவி?
பொன் ராதாகிருஷ்ணனை மிஸோரம் மாநில ஆளுராக நியமிக்கும் திட்டம் பாஜக அரசிடம் உள்ளதாம். இதனால் அவர் விரைவில் மிஸோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. மிஸோரம் ஆளுநராக இருந்தவர் கும்மனம் ராஜசேகரன். இவர் கேரள தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியை ராஜினாமா செய்தார். தேர்தலில் தோல்வியுற்று விட்டார். இதனால் இப்பதவி காலியாக உள்ளது. இந்த இடத்தில் பொன் ராதாகிருஷ்ணனை போடலாம் என திட்டமிடப்படுகிறதாம்.