நெல்லை கண்ணன் விவகாரம்.. மெரீனாவை அதகளப்படுத்திய எச்.ராஜா
சென்னை: நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவின் எச்.ராஜா நடத்திய மெரினா பீச் தர்ணாவினால் போலீசார் விழி பிதுங்கிவிட்டனர்!
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன்.. இவர் போன 29-ந் தேதி மேலப்பாளையத்தில் ஒரு கூட்டத்தில் பேசினார்.. எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடந்த கூட்டம் அது.
கூட்டம் முழுவதும் பாஜகவை உண்டு, இல்லை என ஆக்கிவிட்டார்.. பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வரை கடுமையாகவும் பகிரங்கமாகவும் பேசினார்.. இது சம்பந்தமான புகார்கள் வந்ததையடுத்து, மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆம்புலன்ஸ்
இதனிடையே பாஜகவினர் கடும் கொந்தளிப்பு ஆகிவிட்டனர்.. நெல்லையில் உள்ள பேச்சாளர் வீட்டை முற்றுகையிட்டனர்.. எந்த நேரமும் நெல்லை கண்ணன் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. இதையடுத்து திடீரென அவருக்கு உடம்பு சரியில்லாமல் போகவும், ஆம்புலன்சு மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
மதுரை பாஜகவினர்
விஷயம் அறிந்ததும் ஆஸ்பத்திரி முன்பு திரண்ட பாஜகவினர் சீகிச்சை தரக்கூடாது என்றும், அவரை வெளியேற்றுமாறும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனால், மதுரைக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டு, அதன்படியே ஆம்புலன்சில் மதுரைக்கு அழைத்து சென்றனர். ஆனால் இதை கேள்விப்பட்ட மதுரை பாஜகவினர், எந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார் என்பது தெரியாமலேயே அங்கிருக்கும் 3 தனியார் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.
கயத்தாறு
இதனால் பதற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதியதால், மதுரையில் சிகிச்சை தர முடியாது என்று தெரிவித்துள்ளனர். இந்த சமயத்தில் கயத்தாறு தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த ஆம்புலன்ஸ் அப்படியே திரும்பி சென்றுள்ளது. ஆனால் எங்கு போனது என்றுதான் தெரியவில்லை. இதனிடையே அவர் திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் நெல்லை கண்ணன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
பேச்சின் தாக்கம்
இங்கிருந்தால் எந்நேரமும் கைதாகலாம் என்பதாலும், முன்ஜாமீன் பெறும்வரையிலும் இப்படி வேறு மாநிலத்துக்கு சென்றிருக்கலாம் என்றார்கள். அன்று ஒருநாள் நெல்லை கண்ணன் பேசிய பேச்சின் தாக்கம் இன்னமும் குறையாமல் உள்ளது.. மதுரை சிட்டியில் மட்டும் 17 ஸ்டேஷனில் பாஜகவினர் அவர் மீது புகார் தந்துள்ளார்களாம்.
எச்.ராஜா ஆவேசம்
இதில் செக கடுப்பில் உள்ளது எச்.ராஜாதான்.. நெல்லை கண்ணன் கைது செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல.. அவர் பேச்சுக்கு ஆதரவு தந்த சீமானையும் கைது செய்ய வேண்டும் என்று காட்டமாக வலியுறுத்தினார் எச்.ராஜா. மேலும் பாஜகவின் கல்யாணரானின் ஃபேஸ்புக் பதிவிற்கு கைது செய்து ரிமாண்ட் செய்த போலீஸ், இப்போது, நெல்லை கண்ணன் விஷயத்தில் வெறும் வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளது நாடகமா என்ற கேள்வியையும் முன்வைத்து, பீச்சில் தர்ணாவில் உட்கார்ந்து பெரும் பரபரப்பை கிளப்பி விட்டார்.
பரபரப்பு
அங்கு இவர்களை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறிவிட்டார்கள்.. ஆக மொத்தம்.. நெல்லை கண்ணன் விவகாரத்தை பாஜக லேசில் விடாது என்பது மட்டும் தெரிந்தது. இந்த நிலையில்தான், இன்று இரவு பெரம்பலூரிலுள்ள ஒரு விடுதியில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.